செய்திகள்

அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்காரம்- 16 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது ஐகோர்ட்

Published On 2019-01-11 07:07 GMT   |   Update On 2019-01-11 07:28 GMT
சென்னை அயனாவரத்தில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 16 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #ChennaiGirlHarassment #MadrasHC
சென்னை:

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் 13 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை லிப்ட் ஆப்ரேட்டர்கள், வாட்ச் மேன்கள் என்று 17 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இந்த 17 பேரில் வயதானவர்களும் பலர் உள்ளனர். இவர்கள் அனைவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் அனைவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓர் ஆண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதன்படி, 17 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான போக்சோ வழக்கு, சென்னை மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் சாட்சி விசாரணை விரைவில் தொடங்க உள்ளது.



இந்த நிலையில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தங்களை சிறையில் அடைக்க போலீஸ் கமி‌ஷனர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில 16 பேர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் சி.டி.செல்வம், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் எஸ்.அறிவழகன், அரவிந்தன் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டார்கள்.

இதையடுத்து நீதிபதிகள், ‘16 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமி‌ஷனர் பிறப்பித்த உத்தரவு சட்டப்படி சரியானது இல்லை. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்கிறோம்’ என்று உத்தரவிட்டுள்ளனர். #ChennaiGirlHarassment #MadrasHC
Tags:    

Similar News