செய்திகள்

அமைச்சர் அனுமதி அளித்ததால் பிளாஸ்டிக் தடைகாலம் 15 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது- விக்கிரமராஜா அறிக்கை

Published On 2019-01-09 10:01 GMT   |   Update On 2019-01-09 10:01 GMT
அமைச்சர் அனுமதி அளித்ததால் பிளாஸ்டிக் தடைகாலம் மேலும் 15 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். #vikramaraja #plasticban

சென்னை:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ளது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சிறுகுறு தொழில்முனைவோர், வணிகர்கள் அனைவரும் துன்புறுத்தலுக்கும், அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடந்த ஜனவரி 2-ம் தேதி முதலே பிளாஸ்டிக் தடை காரணமாக, அதிகாரிகளின் தொழில்வணிக விரோத நடவடிக்கைக்கு எதிராக துரிதமாக செயல்பட்டு, தமிழகத்தின் லட்சோப லட்ச வணிகர்களுக்கு ஆதரவாக கண்டனக்குரல் எழுப்பி வருகின்றது.

நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும், தமிழ்நாடு அனைத்து பிளாஸ்டிக் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

இப்போராட்டத்தைத் தொடர்ந்து அமைச்சர் கே.சி.கருப்பணனை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அவர் பிரைமரி பேக்கிங் செய்யக்கூடிய எல்.டி., பி.டி., எச்.எம்., போன்ற பேக்கிங் கவர்களை வைத்திருப்பவர்கள், நாளை முதல் கடைகளை திறந்து 15 நாட்களுக்கு வணிகம் செய்யலாம் என்றும், லைசென்ஸ் பெற்றுள்ள அனைத்து கவர் வகைகளையும் விற்பனை செய்யலாம் என்றும் தெரிவித்தார். தமிழக முதல்வர் பிளாஸ்டிக் சிறுகுறு தொழில்முனைவோர் வணிகர்களையும் அழைத்துச் பேசுவதாக உறுதியளித்துள்ளார். இது நமக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #vikramaraja #plasticban

Tags:    

Similar News