மயிலாடுதுறையில் விநாயகர் கோவிலில் வெள்ளி- உண்டியல் பணம் கொள்ளை
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் சீர்காழி மெயின் ரோட்டில் வள்ளாலகரம் வெங்கடேசா நகரில் செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலுக்கு இன்று காலை அதே பகுதியை சேர்ந்த சோமு பிள்ளை என்பவர் வந்தார். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் விநாயகர் சிலையில் இருந்த வெள்ளி கீரிடமும் திருட்டு போய் இருந்தது.
உடனே இதுபற்றி அவர் மயிலாடுதுறை போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து கோவிலில் விசாரணை நடத்தினர்.
நள்ளிரவில் மர்ம கும்பல் கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடித்து விட்டு சென்றது தெரிய வந்தது. திருட்டு போன வெள்ளி கீரிடம் 820 கிராம் ஆகும்.
கோவில் உண்டியலில் சுமார் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
விநாயகர் கோவிலில் கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.