செய்திகள்

ஸ்டெர்லைட் விவகாரம்- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் தூத்துக்குடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு

Published On 2019-01-09 05:11 GMT   |   Update On 2019-01-09 05:47 GMT
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியதால் தூத்துக்குடி முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். #sterliteissue #supremecourt

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் குடிநீர், காற்று மாசு ஏற்படுவதாக கூறி பல்வேறு கிராம மக்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடந்தது. 100-வது நாள் போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 14 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.

பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் தூத்துக்குடி பேராசிரியை பாத்திமாபாபு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு மதுரை ஐகோர்ட்டு தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகமும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த அனைத்து மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நார்மன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வைகோவும் ஆஜராகி தனது மேல்முறையீட்டு மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார். இந்த அனைத்து மனுக்களையும் விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை இல்லை என்று நேற்று தீர்ப்பு கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியாபுரம், பண்டாரபுரம், மீளவிட்டான் மற்றும் தூத்துக்குடி கலெக்டர் அலுவலக பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

ஏற்கனவே தூத்துக்குடியில் பசுபதிபாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக கடந்த 15.12.18 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவு வந்தவுடன், முதல்அமைச்சர் இது இறுதி உத்தரவு அல்ல, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவில் உள்ள அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்து, சட்டப்படி மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் உச்சநீதிமன்றம் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உடனே ஆலையை திறக்க எந்த இடத்திலும் கூறவில்லை. உச்சநீதிமன்றத்தில் சட்ட வல்லுனர்கள் மூலம் வழக்கு நடத்தப்படும்.

இந்த வழக்கு விசாரணை முடியும் வரை இதே நிலை(ஸ்டேட்டஸ் கோ) நீடிக்கும். உடனடியாக ஆலையை திறப்பதற்கான எந்த உத்தரவும் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வரவில்லை. மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தாலும், அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை நடக்கிறது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்த நிபந்தனைகளை ஆலை நிர்வாகம் சரி செய்த பிறகு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு மாசுகட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்யும். தற்போது எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை. நிபந்தனைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் நிறைவேற்றியதாகவும் தெரியவில்லை.

நாங்கள் சட்டரீதியாக தொடர்ந்து போராடி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்பது அரசின் முடிவு ஆகும். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார். #sterliteissue #supremecourt

Tags:    

Similar News