செய்திகள்

சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்கு தனி அலுவலகம் இல்லாமல் தெருவில் நிற்கிறோம் - ஐகோர்ட்டில் பொன்மாணிக்கவேல் புகார்

Published On 2019-01-07 13:04 GMT   |   Update On 2019-01-07 13:04 GMT
சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு என தனி அலுவலகம் இல்லாமல் தெருவில் நிற்கிறோம் என ஐகோர்ட்டில் பொன் மாணிக்கவேல் புகார் அளித்துள்ளார். #Idolwing #HighCourt #PonManickavel
சென்னை:

தமிழக கோவில்களில், புராதன சிலைகள் பலவற்றை கொள்ளை அடித்தது தொடர்பாக பதிவான வழக்கை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
 
அவர் வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் உயர் அதிகாரிகள், முக்கிய நபர்களை எல்லாம் கைதுசெய்ய தொடங்கினார்.

இதையடுத்து, சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து, கடந்த நவம்பர் 30-ம் தேதி தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

நவம்பர் 30-ம் தேதி ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஓய்வுபெற்றார். இதையடுத்து அன்று முதல் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு என தனி அலுவலகம் இல்லாமல் தெருவில் நிற்கிறோம் என சென்னை ஐகோர்ட்டில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் இன்று புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு என தனி அலுவலகம் இல்லை. எங்களுக்கென தனியாக அலுவலகம் இல்லாமல் நடுத்தெருவில் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவை மீறுவதாக தமிழக அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். பொன் மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் இடைநீக்கம் செய்ய நேரிடும் என சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. #Idolwing  #HighCourt #PonManickavel 
Tags:    

Similar News