செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2019-01-07 09:36 GMT   |   Update On 2019-01-07 09:36 GMT
ஊத்துக்கோட்டை அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டையை அடுத்த தொம்பரம்பேடு பைரவர் கோவில் தெருவில் வசித்து வருபவர் முனுசாமி. அவரது மனைவி பானு. நேற்று இரவு அவர்கள் வீட்டை பூட்டி விட்டு தூங்கினர். உடன் முனுசாமியின்தாய் பூங்காவனம், பானுவின் தாய் வள்ளி ஆகியோரும் இருந்தனர்.

இன்று அதிகாலை 3 மணி அளவில் மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்து புகுந்தனர். அவர்கள் பானு அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பானு மற்றும் குடும்பத்தினர் கூச்சலிட்டனர்.

உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் உடல் முழுவதும் கருப்பு மையை பூசியிருந்தனர். இதனால் கொள்ளையர்களை அடையாளம் காணமுடியவில்லை.

அதே பகுதியில் வசித்து வருபவர் கனாகம்பாள். இவர் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு அதே ஊரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். இவரது வீட்டுக்குள்ளும் புகுந்தமர்ம கும்பல் பீரோவை உடைத்தனர். அதில் நகை, பணம் இல்லாததால் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியிருப்பது தெரிய வந்தது.

2 வீடுகளுக்குள்ளும் புகுந்தது ஒரே கும்பலாக இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்கள் ஆந்திரா அல்லது வடநாட்டு கொள்ளை கும்பலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் ஊத்துக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News