செய்திகள்

மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அதிகாரிகள் மீது தாக்குதல்-2 பேர் கைது

Published On 2019-01-05 16:35 GMT   |   Update On 2019-01-05 16:35 GMT
முசிறி அருகே மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அதிகாரிகளை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகிறார்கள்.
முசிறி:

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக முசிறி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

இதைத் தொடர்ந்து முசிறி வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் வெள்ளூர் கிராம நிர்வாக அதிகாரி தேவராஜ், முசிறி கிராம நிர்வாக அதிகாரி வள்ளிநாயகன் மற்றும் பலர் முசிறி வெள்ளாற்றில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது மொபட்டில் 5  பேர் மணலை மூட்டையில் கடத்தி சென்றனர். உடனே கிராம நிர்வாக அதிகாரிகள் தேவராஜ் மற்றும் வள்ளிநாயகன் ஆகிய 2 பேரும் மடக்கி பிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேரும் சரமாரியாக கிராம அதிகாரிகளை தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர். 

இதுதொடர்பாக கிராம நிர்வாக அதிகாரிகள் முசிறி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து கிராம நிர்வாக அதிகாரிகளை தாக்கிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். 

இந்நிலையில் கிராம நிர்வாக அதிகாரிகளை தாக்கியது வெள்ளுர் பகுதியை சேர்ந்த சரவணன்(34),அதே பகுதியை சேர்ந்த வசந்தகுமார்(19), மற்றும் 3 பேர் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து  முசிறி போலீசார் சரவணன், வசந்தகுமார் ஆகிய 2 பேரை  கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகிறார்கள். 
Tags:    

Similar News