செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் அனுமதி இல்லாமல் இயங்கும் 1600 காய்கறி கடைகள் இழுத்து மூட நடவடிக்கை

Published On 2019-01-05 11:18 GMT   |   Update On 2019-01-05 11:18 GMT
கோயம்பேடு மார்க்கெட்டில் சட்ட விரோதமாக செயல்படும் காய்கறி கடைகள் மீது நடவடிக்கை எடுத்து அவற்றை இழுத்து மூட மார்க்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. #Koyambedumarket

சென்னை:

கோயம்பேடு வணிக வளாகம் ஆசியாவின் மிகப் பெரிய மார்க்கெட்டாக விளங்குகிறது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக கமிட்டி இந்த வணிக வளாகத்தில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்து கண்காணித்து வருகிறது. இங்கு காய்கறி மார்க்கெட்டில் 1900 காய்கறி கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் 1600 கடைகள் சட்டவிரோதமாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு காய்கறி கடை வைத்திருப்பவர்களுக்கு அதற்கான உரிய அனுமதி ஆணை எதுவும் இல்லை. வேறொருவர் காய்கறி கடைக்கு அனுமதி பெற்று அதை மற்றவருக்கு வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ விடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதற்கான முறைப்படியான ஒப்பந்தம் எதுவும் செய்யப்படாமல் சட்ட விரோதமாக செயல்படுவதாக மார்க்கெட் நிர்வாக கமிட்டி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு அறிக்கையாக அளித்துள்ளது. அதில் மொத்தம் உள்ள 1900 கடைகளில் 1600 கடைகள் சட்ட விரோதமாக இயங்குவதாக குறிப்பிடப்பட்டு அந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து சட்ட விரோதமாக செயல்படும் காய்கறி கடைகள் மீது நடவடிக்கை எடுத்து அவற்றை இழுத்து மூட மார்க்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஒட்டு மொத்தமாக 1600 கடைகள் மீது நடவடிக்கை எடுத்து மூடப்பட்டால் சென்னை நகரில் காய்கறி சப்ளை பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே காய்கறி சப்ளை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்பது பற்றி அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு மற்றும் பக்கத்து மாநிலங்களில் இருந்து 450 லோடு காய்கறிகள் வருகின்றன. இங்கிருந்து சென்னை நகரில் உள்ள சிறிய மார்க்கெட்டுகள், சிறிய கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

இதேபோல் சென்னை புறநகர் பகுதி வியாபாரிகளும் கோயம்பேடு வந்து காய்கறிகளை வாங்கிச் சென்று சில்லரை வியாபாரம் செய்கிறார்கள்.

இதற்கிடையே சட்ட விரோதமாக செயல்படும் காய்கறி கடைகளுக்கு உரிய அனுமதி பெற வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்குள் முறைப்படி அனுமதி பெற வேண்டும், ஒதுக்கீடுதாரர்கள் மட்டுமே கடை நடத்த வேண்டும் என்று மார்க்கெட் நிர்வாக கமிட்டி அதிகாரி தெரிவித்துள்ளார். #Koyambedumarket

Tags:    

Similar News