செய்திகள்

குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2019-01-03 18:24 GMT   |   Update On 2019-01-03 18:24 GMT
டி.களத்தூர் கிராமத்தில் சீராக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, டி.களத்தூர் கிராமத்தின் மேற்கு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி நேற்று காலை துறையூர்-திருச்சி சாலையில் டி.களத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் ஆலத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி வெங்கடேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் பழனியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, இனிவரும் காலங்களில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில், ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
Tags:    

Similar News