செய்திகள்

திருமங்கலம் அருகே மதுரை ரவுடியை வெட்டிய 6 பேர் கைது

Published On 2019-01-02 10:59 GMT   |   Update On 2019-01-02 10:59 GMT
திருமங்கலம் அருகே ரவுடியை அரிவாளால் வெட்டிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை:

மதுரை நரிமேடு மருது பாண்டியன் நகரை சேர்ந்தவர் கற்பூர பாண்டியன் (வயது 24). பிரபல ரவுடி. இவர் கடந்த ஆண்டு தல்லா குளத்தில் நண்பர்களுடன் சேர்ந்து வாலிபர் ஒருவரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதையடுத்து கற்பூர பாண்டியன் மதுரையை காலிசெய்துவிட்டு திருமங்கலம் அருகில் உள்ள மருதங்குடி கிராமத்தில் வசித்து வருகிறார். அங்கிருந்து தினமும் மதுரை வந்து தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார்.

இந்த நிலையில் கற்பூர பாண்டியன் சம்பவத்தன்று நண்பர் அய்யனாருடன் மோட்டார் சைக்கிளில் தல்லாகுளம் சென்று மருதங்குடிக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.

அப்போது இலந்தை குளம் விலக்கில் வந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் கற்பூர பாண்டியனை வெட்டியது.

படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த கற்பூர பாண்டியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கற்பூர பாண்டியனை வெட்டிய திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையை சேர்ந்த சுடலை முத்து, மதுரை ஜெய்ஹிந்த் புரம் ஜெகன் (33), தினேஷ் குமார் (23), சங்கர் (23), லோகேஸ் கண்ணன் (23), தனசேகர் (21) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரவுடிகளுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கற்பூர பாண்டியனை கொல்ல முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கற்பூர பாண்டியனிடமும் கொலை முயற்சி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News