செய்திகள்

முதலியார்பேட்டை அருகே வாகனத்தை சேதப்படுத்திய தகராறில் முதியவரை பாட்டிலால் குத்தியவர் கைது

Published On 2019-01-02 10:00 GMT   |   Update On 2019-01-02 10:00 GMT
முதலியார்பேட்டை அருகே வாகனத்தை சேதப்படுத்திய தகராறில் முதியவரை பாட்டிலால் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

முதலியார்பேட்டை ரோடியர் மில் வீதியை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஆனந்த் (வயது 30) மற்றும் குமரவேலு ஆகியோர் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

ஆனந்த் லாஸ்பேட்டையில் உள்ள ஒரு மதுகடையில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். குமரவேலு ரேடியேட்டர் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.

இவர்கள் இருவரும் வீட்டு வாசல் பகுதியில் உள்ள பொதுவான இடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று குமரவேலு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரம் அடைந்த குமரவேலு அங்குள்ள பெட்டி கடையில் இருந்த சோடா பாட்டிலை உடைத்து ஆனந்தை குத்த முயன்றார்.

அப்போது இதனை ஆனந்தின் தந்தை காமராஜ் (56) தடுக்க முயன்ற போது அவரது வயிற்றில் பாட்டில் குத்து விழுந்தது. உடனே குமரவேலு அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த காமராஜ் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து ஆனந்த் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து குமரவேலுவை கைது செய்தனர்.

Tags:    

Similar News