செய்திகள்

மதுரவாயல்-தேனாம்பேட்டையில் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் கைது

Published On 2018-12-26 08:56 GMT   |   Update On 2018-12-26 08:56 GMT
மதுரவாயல்-தேனாம்பேட்டையில் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவர் கடந்த 23-ந்தேதி இரவு துபாய் செல்லும் நண்பரை வழியனுப்ப சென்னை வந்தார்.

இரவு 11 மணி அளவில் ஆலப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது 3 பேர் கும்பல் அவரை கத்தியால் குத்தி 2 சவரன் செயினை பறித்து தப்பி சென்றனர்.

இதுதொடர்பாக மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அதில் அதே பகுதி ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்த கார்த்திக், சூர்யா, அவர்களது மற்றொரு நண்பர் ஆகியோர் சேர்ந்து ஜெகதீஸ்வரனை கத்தியால் குத்தி செயினை பறித்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து கார்த்திக், சூர்யா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தி, செல்போன், 2 சவரன் செயின் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் தப்பி ஓடிய கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர். கைதான கார்த்திக் பல்வேறு செயின் பறிப்பு வழக்குகளில் கைதாகி சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேனாம்பேட்டையில் கஜேந்திரன், சங்கரன், கந்தசாமி ஆகியோரிடம் அடுத்தடுத்து மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக நந்தனத்தை சேர்ந்த குள்ளுபிரதீப், நிர்மல், கண்ணகிநகர் சீனிவாசன், ராஜா ஆகிய 4 பேரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News