வத்தலக்குண்டுவில் டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
வத்தலக்குண்டு:
தமிழகத்தில் டாஸ்மாக் கடை மூலம் அரசு மதுவிற்பனை செய்து வருகிறது. மதுவால் குடும்பங்கள் பாதிக்கப் படுவதாக கூறி பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடை பெற்றன. மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடைகள் நகர் பகுதிக்குள் மாற்றப்பட்டன.
குடியிருப்பு பகுதிகளில் கடைகள் திறக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வத்தலக்குண்டு- மதுரை சாலையில் உள்ள தக்காளி மார்க்கெட் அழகர்நகர் பகுதியில் கோவில்கள் மற்றும் தேவாலயம் உள்ளது. கால்நடை மருத்துவமனை, விவசாய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் உள்ளன. மேலும் இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
தற்போது மேலும் ஒரு டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்து மாவட்ட கலெக்டர் முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளுக்கு இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என ஓய்வு பெற்ற ஆசிரியர் நாகராஜ் தலைமையில் மனு அளித்தனர்.