கொத்தவால்சாவடியில் கொள்ளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் கைது
ராயபுரம்:
கொத்தவால்சாவடி, ஆறுமுகம் தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். நேற்று மாலை அவர் திரும்பி வந்த போது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது.
பீரோவில் இருந்த ரூ.50ஆயிரம் ரொக்கம், 6 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது. இது பற்றி கொத்தவால் சாவடி போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்த போது அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் தர்ஷன் கொள்ளையடித்து தப்பி செல்வது பதிவாகி இருந்தது.
இதையடுத்து தர்ஷனை போலீசார் கைதுசெய்தனர். அவரிடம் இருந்து நகை-பணம் மீட்கப்பட்டது. கைதான தர்ஷன் மறைமலை நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.கடன் பிரச்சினை காரணமாக கொள்ளையில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்து உள்ளார். அவர் வேறு எந்த கொள்ளையிலும் ஈடுபட்டு உள்ளாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.