திருவாரூர் அருகே புயல் நிவாரணம் வழங்க கோரி 5 கிராம மக்கள் சாலை மறியல்
திருவாரூர்:
கஜா புயலால் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் நிவாரணம் வழங்குவதிலும், மீட்புப் பணி நடைபெறுவதிலும் தொய்வு ஏற்பட்டு இருப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று திருவாரூர் அருகே குன்னியூரில் பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் இணைந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். குன்னியூர், திருநெய்ப்பேர், பின்னவாசல் திருக்காரவாசல், புதூர், வேப்பத்தாங்குடி, திருநெல்லிக்காவல் உள்ளிட்ட பகுதிகளில் வழங்கப்படும் நிவாரணம் பாரபட்சத்துடன் வழங்கப்படுவதாகவும், முழுமையான நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் கூறி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதனால் திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியலில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் தேவா, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் புலிகேசி, ஒன்றிய முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். #gajacyclone #relief