செய்திகள்

ஓட்டேரி-கோடம்பாக்கத்தில் 3 வீடுகளை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2018-12-05 06:36 GMT   |   Update On 2018-12-05 06:36 GMT
ஓட்டேரி-கோடம்பாக்கத்தில் 3 வீடுகளை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை ஓட்டேரி பாஷியம் 1-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). சேத்துப்பட்டில் ஏசி டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்தியபாமா (27). இவர் ஓட்டேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்கள் தினமும் காலை 9 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர்.

அப்போது யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த 4 பவுன் நகை, 100 கிராம் வெள்ளிக் கொலுசு, ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு சென்று விட்டனர்.

பின்னர் அதே கொள்ளையர்கள் பக்கத்தில் வசிக்கும் நந்தகுமார் என்பவரின் வீட்டு பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு சென்று விட்டனர்.

இந்த 2 கொள்ளை சம்பவங்கள் குறித்தும் ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது வீட்டில் திடீரென்று 25 பவுன் நகை திருட்டுபோனது. இது தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

சீனிவாசன் வீட்டில் புதுக்கோட்டையை சேர்ந்த மாலா என்ற பெண் வீட்டு வேலை பார்த்து வந்தார். அவர் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் நகை திருடியதை ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது. மாலாவை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News