திருப்பூரில் வீடு புகுந்து திருடிய கொள்ளையன் கைது
திருப்பூர்:
திருப்பூர் பகுதியில் பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு, மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் நடைபெற்றது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் ஆசாமிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதை தொடர்ந்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் எஸ்.பள்ளப்பட்டியை அடுத்த சூலங்குறிச்சி பகுதியை சேர்ந்த ரவி (வயது 58) என்பது தெரிய வந்தது.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் சந்திரசேகர் மற்றும் அவினாசியை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் அங்காளஈஸ்வரி ஆகியோரின் வீடுகளில் பூட்டை உடைத்து நகைகளை திருடியவர் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 21 பவுன் நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.