கோவை மத்திய பஸ் நிலையத்தில் டி.எஸ்.பி.யிடம் செல்போன் பறிப்பு
கோவை:
ஈரோடு மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருபவர் ராதாகிருஷ்ணன் (வயது53).
இவர் கோவை கணபதியில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். ஒரு வழக்கு விசாரணைக்காக கோவை வந்த இவர் பணி முடிந்து ஈரோடு செல்வதற்காக காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் சென்றார். அப்போது அவர் சாதாரண உடையில் இருந்தார்.
ஈரோடு செல்லும் பஸ்சில் ஏறியதும் சட்டைப்பையில் வைத்திருந்த செல்போன் இல்லாதது கண்டு ராதா கிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார். திருட்டு போன செல்போனின் மதிப்பு ர்.17 ஆயிரம் ஆகும். இதுகுறித்து அவர் காட்டூர் போலீசில் புகார் செய்தார்.
உடனே பஸ் நிலையத்துக்கு வந்த போலீசார், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ராதா கிருஷ்ணன் பஸ்சில் ஏறும் போது கூட்டநெரிசலை பயன்படுத்தி ஒரு வாலிபர் அவரது செல்போனை பறித்து செல்வது தெரிந்தது.
ஆனால் அந்த வாலிபரின் முகம் சரியாக தெரிய வில்லை. எனவே அப்பகுதியில் உள்ள மேலும் சில கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் கடந்த சில நாட்களாக சாலையில் நடந்து செல்பவர்களிடமும், பஸ், ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடமும் செல்போன் பறிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இதில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் போலீஸ் டி.எஸ்.பி. ஒருவரிடமே செல்போன் பறிக்கப்பட்ட இச்சம் பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.