செய்திகள்

நாகை மாவட்டத்தில் பரவலாக மழை - 7-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2018-11-09 17:53 GMT   |   Update On 2018-11-09 17:53 GMT
நாகை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் 7-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
நாகூர்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக நாகை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வந்தது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு நாகை, வேளாங்கண்ணி, திருப்பூண்டி, கீழையூர், திருமருகல், கீழ்வேளூர், வாய்மேடு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையின் காரணமாக கீழ்வேளூர் தெற்கு நெம்மேலி பகுதிகளில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

தண்ணீரை வடியவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளது.

தொடர் மழையாலும், கடல்சீற்றம் காரணமாகவும் கடந்த 6 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்தநிலையில் கடல் சீற்றம் காரணமாக நேற்று 7-வது நாளாக நாகை, செருதூர், காமேஸ்வரம், விழுந்தமாவடி, அக்கரைப்பேட்டை, சாமாந்தான்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்கள் தங்களது விசைபடகுகள் மற்றும் பைபர் படகுகளை கடுவையாற்று கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் அக்கரைப்பேட்டை மீன் இறங்குதளம் வெறிச்சோடி காணப்பட்டது. 
Tags:    

Similar News