செய்திகள்

நல்ல கல்விக்கு அடித்தளம் அமைத்தால் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்- கலெக்டர் பேச்சு

Published On 2018-11-01 16:33 GMT   |   Update On 2018-11-01 16:33 GMT
இளம் வயதில் நல்ல கல்விக்கு அடித்தளம் அமைத்தால் தான் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கலெக்டர் சாந்தா பேசினார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு புதிய இளநிலை பாடப்பிரிவுகள்  தொடக்க விழா மற்றும் புதிய மாணவிகளை வரவேற்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் சீனி வாசன் தலைமை வகித்தார். செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் அனந்தலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியில் புதிய இளநிலைப் பாடப் பிரிவுகளான  பாரன்சிக் சயின்ஸ், சைக்காலஜி,  புட் டெக்னாலஜி மற்றும் குவாலிட்டி கன்ட்ரோல், பி.பி.ஏ. ஏவியேஷன் மேனேஜ் மெண்ட் ஆகிய துறைகளை சார்ந்த முதலாம் ஆண்டு வகுப்புகளை கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- 

பாரன்சிக் சயின்ஸ் துறைக்கான களங்கள் மருத்துவ கல்லூரியில் மட்டுமே இருக்கும். ஆனால் முதல் முறையாக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரன்சிக் சயின்ஸ் பிரிவை கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் வளர்ந்த நூலகங்கள் இணைய தளங்கள் இயங்கி வருகின்றன. அதனைப் பயன்படுத்தி பயனுள்ள கல்வியை  பெற வேண்டும். இளம் வயதில் நல்ல கல்விக்கு அடித்தளம் அமைத்தால் தான் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். நடந்த கொலையை கண்டுபிடிக்க இயலாத நிலையில் அந்த குற்றங்களைக் கண்டுபிடிப்பது பாரன்சிக் சயின்ஸ் துறை தான் எனவும் மாணவிகளுக்கு விளக்கி கூறினார்.

கவுரவ விருந்தினராக எஸ்.பி. திஷாமித்தல் கலந்துகொண்டு பேசு கையில், குற்றவியல் பிரிவு, சட்டப்பிரிவு, ராணுவப்பிரிவு போன்ற பல துறைகளுக்கு பாரன்சிக் சயின்ஸ் துறை பயன்படுகிறது. இதைப் போலவே சைக்காலஜி துறையும் முக்கியத்துவம் வாய்ந்தது. மாணவிகள் தினந்தோறும் வரும் சவால்களை எதிர் கொள்ள வேண்டும். தினமும் ஏதாவதொரு புதிய தகவல்களைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். வலிமை வாய்ந்த பெண்கள் சாதனைப்படைக்க வேண்டும்  என்றார்.

இந்திய குற்றவியல் மற்றும் தடய அறிவியல் பேரவையை சேர்ந்த குற்றவியல் ஆய்வாளர் பெயின் பேபி, கல்லூரி முதல்வர் செந்தில்நாதன் உட்பட பலர் பேசினர். இதில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக துணை முதல்வர் அப்ரோஸ் வரவேற்றார். முடிவில் மாணவி நிமிஷா நன்றி கூறினார்.
Tags:    

Similar News