செய்திகள்

வன்னியன்விடுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பு

Published On 2018-10-31 17:42 GMT   |   Update On 2018-10-31 17:42 GMT
வன்னியன்விடுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியில் உள்ள மின்மாற்றிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீரென பழுதானது. இதனால் இப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யபடவில்லை. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வன்னியன்விடுதி பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் ஆலங்குடி-அறந்தாங்கி சாலையில் அமர்ந்து குடிநீர் கேட்டும், பழுதான மின்மாற்றிகளை சரிசெய்யகோரியும் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஜானகிராமன், ஆலங்குடி மேற்கு மின்வாரிய பொறியாளர் ஞானசேகரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் மின்மாற்றிகளை சரிசெய்து, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
Tags:    

Similar News