செய்திகள்
கோப்புப்படம்

18 எம்.எல்.ஏ.க்களை தினகரன் பலிகடா ஆக்கிவிட்டார்- அமைச்சர் உதயகுமார்

Published On 2018-10-23 10:46 GMT   |   Update On 2018-10-23 10:46 GMT
தனது சுய லாபத்துக்காக 18 எம்.எல்.ஏ.க்களை தினகரன் பலிகடா ஆக்கிவிட்டார் என்று அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். #TTVDhinakaran #ADMK #Udhayakumar
மதுரை:

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த 18 பேரும் தங்கள் பதவியை தகுதி இழப்பு செய்த பின்னர் படாதபாடு பட்டுவிட்டார்கள்.

அம்மாவின் அரசை காப்பாற்றுவதற்காக ஒரு நல்ல முடிவை எடுத்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை குற்றாலத்தில் கட்டாயப்படுத்தி அடைத்து வைத்துள்ளனர்.

பதவி ஆசையை காட்டி பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அம்மாவின் அரசை காப்பாற்ற குற்றாலத்தில் அடைத்து வைத்தாலும், துன்பத்தில் அடைத்தாலும் வெளியே வருவார்கள்.

முதலமைச்சரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று நாங்கள் தெளிவாக கூறி வருகிறோம். எனவே தனது உயிரை தந்து அம்மா இந்த ஆட்சியை ஏற்படுத்தினார்.

அது போல உயிரை கொடுத்தாவது இந்த ஆட்சிக்கு துணை நிற்க வேண்டும் என்பது தான் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆசை. அது நிச்சயம் நிறைவேறும்.


தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் அனைத்து திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த தொகுதிகளில் மக்கள் எவரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. 18 எம்.எல்.ஏ.க்கள் தான் மக்களை மறந்து விட்டார்கள்.

தினகரன் தனது சொந்த சுய லாபத்துக்காக இதுவரை அரசியலில் சீரழிவு கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறார். தான் சட்டமன்ற உறுப்பினராக வரவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அம்மாவின் அலங்கோலமான வீடியோவை வெளியிட்டார். அது போலத்தான் ஒருவரை சந்தித்து பேசுவதை கொச்சைப்படுத்தினார்.

இன்று ஆடியோ சி.டி. வெளியிட்டு அமைச்சருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர் எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் அ.தி.மு.க. அரசை அசைத்துக்கூட பார்க்க முடியாது.

இவர்களின் பொய் பிரசாரத்தை முறியடிப்பதற்காகவே திருப்பரங்குன்றத்தில் நாளை (24-ந் தேதி) 3 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ADMK #Udhayakumar
Tags:    

Similar News