புழல் ஜெயிலில் கைதியிடம் மீண்டும் செல்போன் பறிமுதல்
செங்குன்றம்:
கும்மிடிப்பூண்டி சுவாமி ரெட்டி கண்டிகை பகுதியை சேர்ந்தவர் பரத் என்கிற சிவபரத் (27). ஒரு வழக்கு தொடர்பாக இவரை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 10 மணி அளவில் பரத் ஜெயில் அறைக்கு வெளியே அமர்ந்திருந்தார். சிறை போலீசாரை பார்த்ததும் அவர் அறைக்குள் சென்று விட்டார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது அறையில் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு செல்போன், சார்ஜர், 2 சிம்கார்டு ஆகியவை இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ஜெயிலர் உதயகுமார் புழல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அவருக்கு செல்போன், சிம்கார்டு, சார்ஜர் ஆகியவை எங்கிருந்து வந்தது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புழல் ஜெயிலில் கடந்த மாதம் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைதிகளிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் தற்போது மீண்டும் கைதியிடம் செல்போன் சிக்கியுள்ளது. #PuzhalJail