செய்திகள்

சென்னை குடிநீருக்கு மேலும் 15 ஏரி, 7 கல்குவாரி தண்ணீரை எடுக்க ஏற்பாடு

Published On 2018-10-09 07:18 GMT   |   Update On 2018-10-09 07:18 GMT
சென்னை நகர மக்களுக்கு புதிய நீர் ஆதாரமான ஏரி-குவாரிகளில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படும் பட்சத்தில் குடிநீர் சப்ளை முழுமையாக பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ChennaiWater

சென்னை:

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. கோடை காலத்தில் ஏரிகளில் நீர் இருப்பு குறையும் போது சென்னைக்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது போரூர் ஏரி, சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரித்து வினியோகிக்கப்பட்டது. இதனால் குடிநீர் தட்டுப் பாட்டை சமாளிக்க முடிந்தது.

இதைத் தொடர்ந்து சென்னை குடிநீர் ஆதாரங்களை விரிவுபடுத்தவும் புதிய நீர் ஆதாரங்களை கண்டறியவும் சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் அசோக் டோஸ்ரே, செயல் இயக்குனர் பிரபு சங்கர் ஆகியோரின் கீழ் சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டது.

அவர்கள் பொதுப்பணித் துறை, மத்திய நிலத்தடி நீர் ஆணையம், அண்ணா பல்கலைக்கழகம், கிங் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றுடன் இணைந்து ஆய்வு மற்றும் திட்டம் வகுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் சென்னையின் புதிய குடிநீர் ஆதாரங்களாக போரூர் ஏரி, ரெட்டேரி, மணிமங்கலம் அயனம்பாக்கம், திருநீர்மலை, நேமம், அயப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், தென்னேரி, தையூர், சிட்லபாக்கம், மாம்பாக்கம், அரசன் கழனி, பெரும்பாக்கம், கொரட்டூர் ஆகிய 15 ஏரிகள் கண்டறியப்பட்டு உள்ளன.

இதே போல சிக்கராயபுரம், எருமையூர், நன்மங்கலம், பம்மல், பல்லாவரம், திருநீர்மலை, நல்லம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள 7 கல்குவாரி நீரையும் பயன் படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

புதிதாக கண்டறியப்பட்டுள்ள நீர் ஆதாரங்களான ஏரிகள் மற்றும் கல்குவாரிகளில் இருந்து தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். இதன் முடிவை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்கிடையே பலகட்ட ஆய்வுக்கு பிறகு ரெட்டேரியில் உள்ள நீரை சுத்திகரித்து குடிநீருக்கு பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி சென்னை குடிநீருக்கு தினசரி 1 கோடி லிட்டர் பெறும் வகையில் ரெட்டேரியில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

சென்னை நகர மக்களுக்கு புதிய நீர் ஆதாரமான ஏரி-குவாரிகளில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படும் பட்சத்தில் குடிநீர் சப்ளை முழுமையாக பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ChennaiWater

Tags:    

Similar News