செய்திகள்

ஆரணி அருகே தனியார் நிதி நிறுவன மேலாளர் வீட்டில் நகை - பணம் திருட்டு

Published On 2018-09-22 18:26 GMT   |   Update On 2018-09-22 18:26 GMT
ஆரணி அருகே தனியார் நிதி நிறுவன மேலாளர் வீட்டில் நகை - பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆரணி:

ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் இ.பி.நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37), ஆரணியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி ரமேஷ் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார்.

பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்கம் உள்ள கேட் மற்றும் மரக்கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News