செய்திகள்

மத்திய, மாநில அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி - ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் பிரச்சார இயக்கம்

Published On 2018-09-21 15:27 GMT   |   Update On 2018-09-21 15:27 GMT
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் பிரச்சார பேரியக்கம் நடைபெற்றது.
இண்டூர்:

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் பிரச்சார பேரியக்கம் நடைபெற்றது. இதில் இந்தியாவை பாதுகாப்போம், இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் பிரச்சார இயக்கம் வேலூரில் தொடங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை முடித்து வந்த பிரச்சார குழுவை வரவேற்கும் வகையில் தருமபுரி மாவட்ட எல்லையான சப்பானிப்பட்டியில் மாவட்ட செயலாளர் தேவராசன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் மணி ஆகியோர் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பிரச்சார குழுவில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர்ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நஞ்சப்பன், சேதுராமன், விவசாய சங்க மாநில செயலாளர் துரைமாணிக்கம், தேவதாஸ், தங்கவேல், திருநாவுக்கரசு, மாணவர் பெருமன்ற மாநில தலைவர் மவுன குணசேகரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

பிரச்சார குழுவினர் காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, நாகதாசம் பட்டி, பி.அக்ராகரம், பென்னாகரம், இண்டூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தனர். பின்னர் தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

அனைத்து இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்  பிரச்சார குழுவிற்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. பென்னாகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் தலைமையிலும், தருமபுரியில் மாவட்ட செயலாளர் குமார் தலைமையிலும் பிரச்சார குழுவை வாழ்த்தி வரவேற்பு கொடுத்தனர். நேற்று காலை 11 மணிக்கு நல்லம்பள்ளியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு சேலம் மாவட்டத்திற்கு பிரச்சாரக் குழு புறப்பட்டு சென்றது.
Tags:    

Similar News