லைஃப்ஸ்டைல்

போட்டியாளர்களை கட்டுப்படுத்தும் “ஸ்கிரீனிங் டெஸ்ட்” நடைமுறைகள் பற்றி தெரியுமா?

Published On 2019-02-10 07:55 GMT   |   Update On 2019-02-10 07:55 GMT
இப்போதெல்லாம் ஆயிரம் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டாலே பல லட்சம் பேர் போட்டியிடுகிறார்கள். இந்த போட்டியாளர்களை சமாளித்து, தகுதியானவர்களை தேர்வு செய்வது, வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு சவால் நிறைந்த பணியாக இருக்கிறது.
இப்போதெல்லாம் ஆயிரம் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டாலே பல லட்சம் பேர் போட்டியிடுகிறார்கள். இந்த போட்டியாளர்களை சமாளித்து, தகுதியானவர்களை தேர்வு செய்வது, வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு சவால் நிறைந்த பணியாக இருக்கிறது.

தேர்வு மையங்கள் ஏற்படுத்துவது, கண்காணிப்பாளர்களை நியமிப்பது, தேர்வுத்தாள் தயாரிப்பது, ‘காப்பி’யடிப்பதை தடுக்க மாறுபட்ட முறைகளை யோசிப்பது என அடுக்கடுக்கான சவால்கள் இருக்கிறது. அதனால் தேர்வுகளை முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என பலகட்டங்களாகவும், கடுமையானதாகவும் கடைப்பிடிக்கும் முறை உள்ளது. இதில் போட்டியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யவும், ‘ஸ்கிரீனிங் டெஸ்ட்’ எனும் திரையிடல் தேர்வு நடத்தப்படுகிறது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதில் விண்ணப்பதாரர்களை துல்லியமாக மதிப்பிடும் பல வகை தேர்வுகள் இடம் பெறுகின்றன. இந்தத் தேர்வு முறை எப்படி இருக்கும், இதற்கு எப்படி தயாராக வேண்டும் என்பதை அறிவோமா?

ஸ்கிரீனிங் தேர்வில், புத்திக் கூர்மைத்திறன், பொருள் அறிதல், சூழல் உணர்தல், வார்த்தைத் தொடர்பை அறிதல், தன்மதிப்பீடு என பலவித தேர்வுகள் உள்ளன.

புத்திக்கூர்மையை சோதிக்க பெரும்பாலும் கணிதம் சம்பந்தப்பட்ட பாடங்களில் இருந்து கூர்ந்து கவனித்து விடையளிக்கும் கேள்விகள் இடம் பெறுகிறது. படப்புதிர், உறவு முறையை கண்டுபிடித்தல், எண்களின் தொடர்ச்சி வரிசையை அறிதல், வடிவங்களின் நகர்ச்சி காரணங்களை அறிதல், திசையை அறிதல், கோடிங்- டீகோடிங் முறை போன்றவை இதில் அடங்கும். தாயக்கட்டைகள், சீட்டுக்கட்டுகளின் கணிப்பு, அணிகள் என இதன் நுட்பமான அறிவுச்சோதனை நீளும்.

போாட்டியாளரிடம் புதைந்து கிடக்கும் திறமைகளை தோண்டி எடுத்து அறியும் விதமாக பொருள் உணர்தல் தேர்வு (Thematic Apperception test) நடத்தப்படுகிறது. எளிதாகச் சொல்வதானால் படம் பார்த்து கதை சொல் என்பார்களே அதுதான் இந்தத் தேர்வு. இது எளிதானது என்று நாம் நினைத்தாலும் நமது மனநிலை, குணநலன்கள், புத்திக்கூர்மை, குழு பண்பு உள்ளிட்டவற்றை தேர்வாளருக்கு காட்டிக் கொடுக்கும் தேர்வாக இது அமைகிறது. தவறுகள், எதிர்மறை சூழல்கள் இல்லாமல் பதில் அளிப்பவர்கள் மதிப்பெண்களை அள்ளலாம். இது போலவே குறிப்பிட்ட சூழலில் எப்படி செயல்படுவீர்கள்? என்பதை அறியும் சூழல் எதிர்விளைவுத் தேர்வும் பின்பற்றப்படும். சிக்கலான சூழல்களை அல்லது மிக எளிதான சூழல்களை கொடுத்து போட்டியாளரின் மன நிலையை பலப்பரீட்சை செய்யக்கூடியது இந்தத் தேர்வு.

வார்த்தை உளவியல் தேர்வும் இதில் மற்றொரு நடைமுறை. ஒரு வார்த்தையை கொடுத்துவிட்டு, அதைப் பற்றிய உங்கள் எண்ணங்களை ஒரு வாக்கியம் அல்லது சில வரிகள் எழுத கேட்பார்கள். இது போட்டியாளரின் மனநிலையை படம் பிடிப்பதாக அமையும்.

தன்னைப் பற்றிய சுய விளக்கத் தேர்வும், ஸ்கிரீனிங் டெஸ்ட் தேர்வு முறையில் முக்கியமானதாகும். மற்ற தேர்வுகளில் மறைமுகமாகவும், சாதுரியமாகவும் கேட்கப்படும் கேள்விகள், இ்ங்கே விளக்கமாக, நேரடியாக கேட்கப்படுகிறது. இது உங்களைப் பற்றிய முழுமையான புரிதலுக்கு வழிவகுப்பதாக அமையும். குறைபாடுகள் இருந்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்.

போட்டியாளர்களை கலங்க வைப்பதுடன், தரம் பிரித்துக் காட்டும் இந்தத் தேர்வில் வெற்றி பெற சிறந்த பயிற்சியும், முயற்சியும் அவசியமாகும். ஏராளமான மாதிரி தேர்வுகளை எதிர்கொள்ளுதல் மூலம் இந்தத் தேர்வில் சாதிக்க முடியும்!
Tags:    

Similar News