லைஃப்ஸ்டைல்

பெண்களே தண்ணீர் சிக்கனம் அவசியம்

Published On 2018-04-26 02:40 GMT   |   Update On 2018-04-26 02:40 GMT
தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது மிக அவசியமான ஒன்று. பெண்கள் எப்படியெல்லாம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
நம் வீட்டில் உள்ள தண்ணீர் நமக்கு மட்டும் சொந்தமானதா? நமக்குச் சொந்தமான இடத்தில் துளையிட்டு நாம் கட்டணம் செலுத்தும் மின்சாரம், நமது மோட்டாரைக் கொண்டு நாம் சேமிக்கும் தண்ணீர் நம்முடைய நீர் என்று மட்டும் சொல்ல முடியுமா? பூமியிலிருந்து எடுக்கும் ஒவ்வொரு துளி நீரும் அனைவருக்கும் பொதுவானது. நாம் நீரை விரயமாக்கினால் அது பிறரையும் பாதிக்கும். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது மிக அவசியமான ஒன்று.

தண்ணீருக்காக அலையாய் அலையும் மனிதர்களை பார்க்கிறோம். அவர்கள் கஷ்டங்களை காதுகொடுத்து கேட்கிறோம். ஆனாலும் எத்தனையோ அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தனி வீடுகளிலும் மொட்டை மாடியில் காணப்படும் நீர்த் தொட்டிகளில் தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டிருக்கும் காட்சி தென்பட்டுக்கொண்டே இருக்கிறது.

கோடை நெருங்குகிறது. நிலத்தடியில் மழைக்காலம் போன்று தாராளமாக நீர் கிடைக்காது. இது எல்லாம் நமக்குத் தெரியும். ஆனால் அது நமது நினைவில் உறைப்பதில்லை. அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் அனைவருமே தண்ணீர் வி‌ஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் யாரோ ஒருவரது தவறால் அனைவருக்கும் கஷ்டம் வந்துசேரும். தேவைக்கு மட்டுமே தண்ணீரைப் பயன்படுத்துங்கள். நமது இருப்பு மிகவும் குறைவு என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாகச் செலவிட்டால் சிரமங்களைக் குறைக்கலாம்.

பெண்களே பாத்திரங்களை கழுவும் தொட்டியில் போட்டுப் பாத்திரங்களை கழுவும்போது குழாயில் நீர் கொட்டிக்கொண்டே இருக்க வேண்டுமா? சிறிது கவனமாக இருந்தால் பெருமளவில் நீரைச் சேமிக்கலாம். பூச்செடிகளுக்கு நீர் பாய்ச்சும்போது செடிகளுக்கு மட்டும் நீரைத் தெளிக்கலாம். துணி துவைக்கும்போது பக்கெட் நிரம்பிய பின்னரே அலசுங்கள். குழாயைத் திறந்துவிட்டுக்கொண்டே துணிகளை அலசும்போது நீர் வீணாவது தெரியவே தெரியாது. காய்கறிகளையும், பழங்களையும் கழுவ வேண்டுமானால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து அதில் இவற்றைப் போட்டுக் கழுவுங்கள். குழாயைத் திறந்துவைத்து இதே வேலையைப் பார்த்தால் தண்ணீர் அதிகம் செலவாகும்.

வீட்டின் முன்பகுதிகளையும் நடைபாதைகளையும் கழுவி விடுவதற்கு முன்னர் அவற்றை துடைப்பத்தால் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். முழுவதும் தண்ணீரால் செய்ய வேண்டுமானால் ஏராளமாய் தண்ணீர் செலவாகும். இப்படிப் பல வழிகளில் நீரைச் சேமித்தால் அது நமக்கும் நல்லது; பிறருக்கும் நல்லது.
Tags:    

Similar News