லைஃப்ஸ்டைல்

தாயின் கருவில் வளரும் குழந்தையை தாக்கும் வேதிப்பொருட்கள்

Published On 2019-01-22 05:08 GMT   |   Update On 2019-01-22 05:08 GMT
சுற்றுச்சூழலில் இருந்து தாயின் உடலைச் சென்றடையும் வேதி நச்சுகள், தொப்புள் கொடி வழியாகத் தாயின் கருப்பையில் வளரும் குழந்தையைச் சென்றடையும் உண்மையை ஆய்வுகள் உறுதிப்படுத்துகிறது.
காற்று, நீர், வீடு, அலுவலகம், நாம் பயன்படுத்தும் நுகர்வுப் பொருட்கள் என நாம் சார்ந்துள்ள அனைத்தும் நமக்குள் வேதிப்பொருட்களை மறைமுகமாக செலுத்தி வருகின்றன. சந்தை பொருளாதாரமும், நுகர்வு கலாசாரமும் இதைத் தீவிரப்படுத்தி, நம் ஒவ்வொருவரையும் மாசடைந்த மனிதர்களாக்கி வருகின்றன.

பிறக்கும் குழந்தைகளையும், கருவில் வளரும் குழந்தைகளையும்கூட இந்த வேதி தாக்குதல் விட்டு வைக்கவில்லை. பிறக்கும் குழந்தையின் உடலில் 200-க்கும் அதிகமான வேதிப்பொருட்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. வாஷிங்டனில் இருந்து செயல்படும் சுற்றுச்சூழல் பணிக்குழு என்ற அமைப்பின் 2005-ம் ஆண்டின் அறிக்கை, செயற்கை வேதி பொருட்களால் தாக்கப்படுவது கருவறையிலேயே தொடங்கிவிடுகிறது என்கிறது.

குழந்தைகளின் தொப்புள் கொடி துண்டிக்கப்பட்ட, பிறகு அதிலிருந்து ரத்தத்தை எடுத்து ஆய்வு செய்த போது, அதில் அடங்கியிருந்த வேதிப்பொருட்களின் பட்டியல் நம்ப முடியாததாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே தடைசெய்யப்பட்ட தொழிலக வேதிப்பொருட்கள், ஒட்டாத டெப்லான் வகை வேதிப்பொருட்கள், துரித உணவை அடைக்கும் பெட்டி உற்பத்தி, ஆடை உற்பத்தி போன்ற தொழில்களில் எண்ணெய் பிசுக்கை நீக்கும் பெர்ப்ளோரோ வேதிப்பொருட்கள் போன்றவை தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்தன. அந்த வகையில் 413 செயற்கை வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த வேதிப்பொருட்களில் பெரும்பான்மையானவை புற்றுநோயையும், மூளை நரம்பு மண்டலப் பிரச்சினைகளையும், வளர்ச்சிக் குறைபாடுகளையும் உருவாக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதற்கான காரணங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன.

சுற்றுச்சூழலில் இருந்து தாயின் உடலைச் சென்றடையும் வேதி நச்சுகள், தொப்புள் கொடி வழியாகத் தாயின் கருப்பையில் வளரும் குழந்தையைச் சென்றடையும் உண்மையை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. மனித குலம் இன்றைக்கு உருவாக்கி வைத்துள்ள மாசடைந்த சுற்றுச்சூழல், பிறந்தது முதல் சுவாசத்தைக்கூடத் தொடங்காத சிசுவின் உடலை, அபாயகரமான வேதிப்பொருட்களின் குப்பைக் கூடையாக்கி இருப்பது அறம் சார்ந்த அறிவியல் வளர்ச்சி காணாமல் போய்விட்டதைக் காட்டுகிறது. 
Tags:    

Similar News