லைஃப்ஸ்டைல்

வெள்ளைப்படுதல் - அறிகுறியும், காரணமும்

Published On 2018-12-21 03:44 GMT   |   Update On 2018-12-21 03:44 GMT
ஆபத்தான நோய்களின் அறிகுறியாகவும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். தொடக்கத்திலே வெள்ளைப்படுதலுக்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கு சிகிச்சை பெற வேண்டும்.
நம் உடலில் பல பகுதிகளுக்கு பிசுபிசுப்புத்தன்மை தேவைப்படுகிறது. பெண்களின் பிறப்பு உறுப்பு எப்போதும் ஈரப்பசை மற்றும் வழவழப்புடன் இருக்க வேண்டும். அதற்காக இந்த பிசுபிசுப்பான வெள்ளைத் திரவம் சுரக்கிறது. இது, பிறப்பு உறுப்பின் தசைப் பகுதி மற்றும் கருப்பையின் வாய் மற்றும் அதன் உட்சுவர்களில் இருந்தும் சிறிதளவு சுரக்கிறது. இதன் சுரப்பு அதிகமாகி விடும்போது அதை வெள்ளைப்படுதல் என்று கூறுகிறோம்.

சினைப்பையில் இருந்து சினை முட்டை வெளியாகி, கருப்பைக்கு வரும் காலத்திலும், மாத விலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பும், பின்பும், கர்ப்ப காலத்திலும் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும். தாம்பத்திய உறவின் போது, பெண்களின் உணர்ச்சி உச்சம் அடையும் நிலையில் சுரப்பு அதிகப்படும்.

அறிகுறிகள்…

நிறம், வாசனை, அளவு போன்றவை மாறுபடுவது முதல் அறிகுறி. பிறப்புறுப்பில் அரிப்பும், உள்ளாடை நனையும் அளவிற்கும், கால்களில் வழியும் அளவிற்கு இருந்தால் அது உடனடியாக கவனிக்கத் தகுந்த அறிகுறியாகும்.

அதிகரிக்க காரணங்கள்…

யோனிக் குழாயில் கிருமித் தொற்றே இதற்கு முக்கிய காரணம். ஆண் உறுப்பின் நுனித் தோல், சிறுநீர்துளை, ஆண்மை சுரப்பி ஆகிய இடங்களில், ‘டிரைக் கோமோனஸ் வெஜைனாலிஸ்’ என்ற கிருமிகள் காணப்படுகின்றன. இது ஆண்களிடமிருந்து பெண்களுக்கு தொற்றுகிறது. கிருமிகள் உள்ள ஆண்கள் பயன்படுத்தும் கழிப்பிடம், குளியல் அறை போன்றவைகளை பயன்படுத்தும் திருமணமாகாத பெண்களுக்கும், சிறுமிகளுக்கும்கூட வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.



கிருமித் தொற்றால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால், சுரப்பு மஞ்சள், இளம் பச்சை நிறத்திலோ காணப்படும். அரிப்பு தோன்றும். சிறுநீர் கழிக்கையில் எரிச்சலும், கடுப்பும் தோன்றும். தாம்பத்திய தொடர்பின் போது எரிச்சல், வலி ஏற்படும். மாத விலக்கின்போது கிருமிகள் அதிகம் பெருகுவதால், யோனிக் குழாயில் நுரைத்த வெண் திரவம் தெரியும். அந்த குழாய் சிவந்து, கருப்பையின் வாய்ப் பகுதியில் செம்புள்ளிகளும் காணப்படும். வெள்ளைப்படுதலை ஏற்படுத்தும் கிருமிகள் பெண்ணிடம் இருந்து ஆணுக்கும் வரும். கருத்தடை மருந்துகள், நுண்ணுயிர் கொல்லி மருந்துகள், ஸ்டீராய்டு மருந்துகள் போன்றவைகளை நீண்ட காலம் பயன்படுத்தி வந்தாலும் வெள்ளைப்படுதல் அதிகமாகும்.

கண்களுக்கு தெரியாத நுண் கிருமிகள் கருப்பையில் தொற்றிக் கொண்டாலும் வெள்ளைப்படுதல் அதிகரிக்கும். அதனால், பெண்கள் உடலையும், உள்ளாடையையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சிறுநீர் கழித்த ஒவ்வொரு முறையும் தண்ணீரால் கழுவுவது அவசியம். நுண்கிருமிகளின் வகை மற்றும் தாக்குதலின் தன்மையை பொறுத்து, வெள்ளைப்படுதலின் அளவு அதிகரிக்கும். பால்வினை நோய்களாலும் இந்த பாதிப்பு ஏற்படும்.

கருப்பை கோளாறால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் அரிப்பு தோன்றாது. ஆனால், அடிக்கடி அடிவயிறு வலிக்கும். கருப்பை புற்றுநோயால் அதிக வெள்ளைப்படுதல் ஏற்பட்டால், அது இளஞ்சிவப்பாக இருக்கும். உள்ளாடையில் திட்டாக கறைபோல் படியும். சில வேளைகளில் உள்ளாடை முழுதும் நனைந்து விடும். அப்போது நாற்றமும் அதிகமாக இருக்கும். ஹார்மோன் குறைபாடு காரணமாகவும் அதிக வெள்ளைபடுதல் ஏற்படுவதுண்டு. கருத்தடைக்கு பயன்படுத்தும் சாதனங்கள், அப்பகுதியில் பயன்படுத்தும் களிம்பு போன்றவைகளால் அலர்ஜி ஏற்பட்டு வெள்ளைப்படுவதும் உண்டு. அத்தகைய பொருட்களின் பயன்பாட்டை நிறுத்திவிட்டாலே வெள்ளைப்படுதல் சரியாகி விடும்.

சாதாரண நிலையிலும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். ஆபத்தான நோய்களின் அறிகுறியாகவும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். அதனால், தொடக்கத்திலே வெள்ளைப்படுதலுக்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கு சிகிச்சை பெற வேண்டும். நவீன சிகிச்சைகளும், மருந்துகளும் இதற்காக உள்ளன.
Tags:    

Similar News