லைஃப்ஸ்டைல்

அழகை தக்க வைத்துக்கொள்ள இரவில் படுக்கும் முன் செய்ய வேண்டியவை

Published On 2019-02-22 04:51 GMT   |   Update On 2019-02-22 04:51 GMT
சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது.
தினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் ஒரு பத்து, இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது.

கண்கள்:


முகத்திற்கு பொலிவும், வசீகரமும் சேர்ப்பவை கண்கள். சிலருக்கு அந்த கண்களின் புருவத்தில் தேவையான அளவிற்கு முடி இருக்காது. இதற்கு சுத்தமான விளக்கெண்ணெயை கொஞ்சமாக எடுத்து புருவ முடிகளிலும், கண்முடிகளிலும் தேய்த்து வந்தால், முடி அடர்த்தியாக வளரும். சோர்வான கண்களுக்கு, ரோஸ் வாட்டரில் நனைத்த காட்டன் பேட், வட்டமாக வெட்டிய வெள்ளரித் துண்டு போன்றவற்றை கண்களின் மேல் வைத்துக்கொள்ளலாம். நன்றாகப் பொடியாக நறுக்கிய வெள்ளரித் துண்டுகளையோ அல்லது அதனுடன் கேரட் ஜூஸைக் கலந்தோ கண்களுக்கு அடியில் தடவி வந்தால், கரு வளையங்கள் மறையும்.

உதடுகள்:

தினமும் சிறிதளவு ‘வேசலின்’ எடுத்து உங்கள் உதடுகளில் தடவி வந்தால், மென்மையாகவும், வெடிப்புகள் இல்லாமலும் இருக்கும்.

பாதம்:

நாள்தோறும் வேலை முடிஞ்சு வீட்டுக்கு சோர்வா வருவீங்க இல்லையா? வந்ததும் ஒரு பெரிய பாத்திரத்தில் நல்ல நறுமணமுள்ள குளியல் உப்பை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, உங்கள் பாதங்களை அதில் ஒரு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். சும்மா இருப்பது போரடித்தால், நல்ல ஸ்க்ரப்பர் கொண்டு குதிகாலைத் தேய்க்கலாம். ஆரஞ்சு ஸ்டிக் கொண்டு கால் நகங்களில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றலாம். பின்னர், கால்களை தண்ணீர் அல்லது சோப்பால் நன்கு கழுவிவிட்டு, ‘கோல்ட் க்ரீம்’ அல்லது ‘மாய்சரைசர்’ போட வேண்டும். இதனால் உங்கள் பாதங்கள் மிருதுவாகவும் பளிச்சென்றும் இருக்கும்.

முகம்:

இரவு உறங்கச் செல்லும்முன் நாள் முழுதும் முகத்தில் படிந்துள்ள அழுக்கை அகற்றுவது முக்கியமான வேலையாக இருக்க வேண்டும். எண்ணெய் பசையுள்ள சருமத்தை ‘வால்நட் ஸ்க்ரப்’ கொண்டும், உலர்ந்த மற்றும் சென்ஸிடிவ் சருமத்தை மிருதுவான ‘பேபி ஆயில்’ கொண்டும் துடைக்கலாம். அவ்வாறு துடைக்கும்போது உங்கள் கைகளின் அசைவு வட்ட வாக்கில் இருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட்டு தரமான ‘நைட் க்ரீம்’களை உபயோகப்படுத்த வேண்டும். எளிதான மாய்சரைசரும் உபயோகப்படுத்தலாம். இது, உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. இந்த மாய்சரைசரை முகம், கைகள், கழுத்து மற்றும் கண்களுக்கு கீழேயும் உபயோகிக்கலாம்.

தலைமுடி:

இரவில் எண்ணெய் தேய்த்துவிட்டுக் காலையில் ஷாம்பு தேய்த்துக் குளித்தால் முடிக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்தப் பாத்திரத்தின் உள்ளே ஒரு சிறிய அளவிலான பாத்திரத்தில் எண்ணெயை (ஆலிவ் ஆயில், ஆல்மண்ட் ஆயில் அல்லது சாதாரண தேங்காய் எண்ணெய்) எடுத்துக் கொண்டு சூடு படுத்த வேண்டும். லேசான சூடு போதுமானது. அவ்வாறு சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். கால்களைப் பராமரிக்க அமரும் அந்த நேரத்தில் இதையும் செய்து முடித்தால் உங்கள் நேரம் மிச்சமாகும்.

இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்!
Tags:    

Similar News