லைஃப்ஸ்டைல்

இளநரையிலிருந்து மீள்வது எப்படி?

Published On 2019-02-05 03:03 GMT   |   Update On 2019-02-05 03:03 GMT
இளநரையை கண்டு அதிர்ச்சி அடையாமல் பாரம்பரியமான உணவு முறைகளையும், பழக்க வழக்கத்தையும், தேவையான சத்துக்களையும் எடுத்து கொண்டால் இளநரை இல்லாமல் நம்மை காத்து கொள்ளலாம்.
நரைமுடி என்பது மூப்பு எனும் வயது முதிர்ச்சியின் தொடக்கம். இளவயதில் நரை முடி என்பது பெரிய குமுறல். 40 வயதை கடந்து வரும் நரை முடி இப்போது 20 வயதாகும் போதே வந்து விடுகிறது. இளநரை முடி வயதான தோற்றம் அளிப்பதால் வருத்தம் அளிக்கிறது. அறிவியல் பூர்வமாக பார்த்தால் மெலனின் எனும் கருப்பு நிறத்தை தரும் நிறமிசத்து குறைவாவதே இளநரைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இன்றைய நவீன உலகில் உணவு முறைகளால் அதிகமாக இளநரை ஏற்படுகிறது. மன அழுத்தம், வளர்சிதை மாற்றக்கோளாறுகள், மறந்த எண்ணெய் குளியல், மறக்கப்படும் பாரம்பரிய உணவு முறைகள், நொறுக்கு தீனிகள், குளிர்பானங்கள் இவைகளே இளநரை ஏற்பட முக்கிய காரணங்கள் ஆகும்.

புதிது புதிதாக சந்தைகளில் விற்கப்படும் செயற்கை வேதி பொருள்கள் நிறைந்த சோப்பு கட்டிகளும், ஷாம்புகளும் முடியின் இயற்கை அழகினை சிதைக்கின்றன. பரம்பரை காரணத்தாலும், தைராய்டு சுரப்பி சரிவர செயல்படாததாலும் ரத்த சோகையாலும், அதற்கு காரணமான வைட்டமின்கள் பி 12, சி, ஏ இவற்றின் குறைபாட்டாலும், மெலனின் நிறமியை உற்பத்தி செய்யும் மெலனோசிட்ஸ் எனும் செல்கள் பாதிக்கப்படுவதால் இளநரை தோன்றுகிறது.

இள நரையிலிருந்து மீள்வது எப்படி?

வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். பித்தத்தை தூண்டும் உணவுகளை தவிர்க்க வேண்டும். முக்கியமாக காரசாரமான, மசாலா சேர்ந்த உணவினை தவிர்க்க வேண்டும். பாக்கெட்டுகளில் அடைக்கபட்ட தின்பண்டங்களை தொடக்கூடாது. நேரத்துக்கு சரியாக சாப்பிட வேண்டும். வைட்டமின்கள் நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

வைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய், கொய்யா, நார்த்தை, மாதுளை, வைட்டமின் ஏ அதிகம் உள்ள பப்பாளி, இரும்பு சத்துக்கு முருங்கை கீரை, கறிவேப்பிலை, பேரிச்சம் பழம், அத்தி பழம், சர்க்கரைக்கு பதில் இரும்பு சத்து நிறைந்த பனை வெல்லம், வைட்டமின் பி 12 அதிகம் உள்ள பால் மற்றும் மாமிச சூப் போன்ற சத்தான உணவுகளை, உட்கொள்ள வேண்டும். கல்லீரலை பலப்படுத்தும் கரிசலாங்கண்ணி கீரை, வைட்டமின் ஏ நிறைந்த சிறுகீரை, பொன்னாங் கண்ணிகீரை இவற்றை உணவில் அதிகம் சேர்த்துகொள்ளலாம். டீ காபி இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதற்கு மாற்றாக புரதச்சத்து நிறைந்த பாதாம் பருப்பு அல்லது முளைகட்டிய தானியங்கள் இவற்றில் பனைவெல்லம் சேர்த்து உண்ணும் போது நல்ல பலன் கிடைக்கும்.

பயோட்டின் எனும் வைட்டமின் பி-7 உள்ள மீன், உப்பு சேர்த்து வறுத்த பாதம், காலி பிளவர், முட்டை கரு, காளான், பாலாடைக்கட்டி போன்ற உணவுகளை எடுத்து கொள்ளலாம். இள நரையை போக்குவதில் செம்புச்சத்து முக்கிய பங்காற்றுகிறது. சிறுகீரை, மூக்கிரட்டை, கரிசாலை, அவுரி இலைபோன்ற மூலிகைகள் செம்புச்சத்து நிறைந்தது. இவற்றை உணவில் அதிகம் சேர்ப்பதுடன் இவை சேர்ந்த உள் - வெளி மருந்துகளை பயன்படுத்தலாம். செம்பு பாத்திரத்தில் நீர் வைத்து குடிக்கலாம். உள் மருத்துவதோடு வெளி தடவும் தைலங்களை பயன்படுத்த நல்ல பயன் தரும். சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள கையான் தைலம், நீலி பிருங்காதி தைலம், மருதாணி தைலம், அவுரி தைலம், அரைகீரை விதை தைலம் இவற்றில் ஒன்றை வாங்கி பயன்படுத்தலாம்.

கறிவேப்பிலையை அல்லது அவுரி இலையை தேங்காய் எண்ணெயில் போட்டு மூன்று நாட்கள் வெயிலில் வைத்து தலை முடி தைலமாக பயன்படுத்தலாம். நிலாவரை இலை, மருதாணி இலை, கடுக்காய் பொடி இவற்றை வெந்நீரில் ஊற வைத்து பசையாக்கி தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்கலாம். மன அழுத்தத்தையும், பித்தத்தையும் குறைக்கும் சீரக தைலம், வில்வாதி தைலம், தாமரை தைலம், நெல்லிக்காய் தைலம் இவற்றில் ஒன்றை எண்ணெய் குளியலுக்கு பயன்படுத்தலாம். இவ்வாறாக இள நரையை கண்டு அதிர்ச்சி அடையாமல் மேற்கூறிய பாரம்பரியமான உணவு முறைகளையும், பழக்க வழக்கத்தையும், தேவையான சத்துக்களையும் எடுத்து கொண்டால் நரை மட்டுமல்ல திரை, மூப்பு, பிணி போன்ற அனைத்திலும் இருந்து நம்மை காத்து கொள்ளலாம்.

மரு. சோ.தில்லை வாணன் அரசு சித்த மருத்துவர், பேர்ணாம்பட்டு
Tags:    

Similar News