லைஃப்ஸ்டைல்

கடாய் சிக்கன் செய்வது எப்படி?

Published On 2019-03-01 09:44 GMT   |   Update On 2019-03-01 09:44 GMT
இங்கு கடாய் சிக்கன் செய்வது எப்படி என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை விடுமுறை நாட்களில் முயற்சித்து, சாப்பிட்டு மகிழுங்கள்.
தேவையான பொருட்கள் :

சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
அரைத்த தக்காளி - 2 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
பட்டை - 1
பச்சை ஏலக்காய் - 4
கிராம்பு - 4
பிரியாணி இலை - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரஷ் க்ரீம் - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது

ஊற வைப்பதற்கு...

தயிர் - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1 டீஸ்பூன்



செய்முறை:

சிக்கனை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குடைமிளகாயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தும் சேர்த்து பிரட்டி, அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், குடைமிளகாய் மற்றும் தக்காளியை போட்டு உப்பு சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி இறக்கி ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை, சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, மல்லி தூள், சீரகப் பொடி, பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பின்னர் அரைத்த தக்காளியை ஊற்றி கிளறி, 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

அடுத்து ஊற வைத்துள்ள சிக்கனை அத்துடன் சேர்த்து, தீயை அதிகரித்து 10 நிமிடம் பிரட்டி விட்டு வேக வைக்க வேண்டும்.

சிக்கனில் உள்ள நீரானது முற்றிலும் வற்றியதும், தீயை குறைத்து, அதில் கரம் மசாலா சேர்த்து கிளறிய பின்னர் வதக்கிய குடைமிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.

சிக்கனானது நன்கு வெந்ததும், வாணலியை இறக்கி, அதன் மேல் பிரஷ் கிரீம் மற்றும் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்தால், கடாய் சிக்கன் ரெடி!!!

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News