லைஃப்ஸ்டைல்

சத்தான சுவையான சிறுதானிய புட்டு

Published On 2019-02-27 05:00 GMT   |   Update On 2019-02-27 05:00 GMT
சிறுதானிய புட்டு மிகவும் சத்தான சிற்றுண்டி. இன்று சிறுதானியங்களை சேர்த்து சுவையான சத்தான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
புட்டு மாவு தயார் செய்ய தேவையான பொருட்கள்

சாமை - 1 கப்
தினை - 1 கப்
வரகு - 1 கப்
குதிரைவாலி - 1 கப்
கேழ்வரகு - 1 கப்
கம்பு - 1 கப்
சோளம் - 1 கப்

புட்டு மாவு தயார் செய்யும் முறை

சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவற்றை தனித்தனியே வெறும் வாணலியில் போட்டு நன்கு வாசனை வரும்வரை வறுக்கவும். பின் அதனை ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும். சிறுதானியப்புட்டு மாவு தயார்.

இந்த மாவினை காற்று புகாத டப்பாவில் அடைத்து சுமார் மூன்று மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.



புட்டு தயார் செய்ய தேவையான பொருட்கள்


சிறுதானிய புட்டு மாவு - 1 கப்
தேங்காய் - ½ மூடி (மீடியம் சைஸ்)
நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய் - 3
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :

தேவையான அளவு தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

தேங்காயை துருவிக் கொள்ளவும்.

ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிறுதானியப் புட்டு மாவை போட்டு அதனுடன் உப்பு கலந்த தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து கட்டி விழாமல் உதிரியாகப் பிசிறவும். புட்டு மாவானது உதிரியாகவும், ஈரப்பதத்துடனும் இருக்குமாறு செய்ய வேண்டும்.

பின் ஈரப்பதமான மாவினை ஒன்றுபோல் அழுத்திவிட்டு துணியால் மூடி பத்து நிமிடம் வைக்கவும். பின் புட்டு மாவினை இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.

வெந்த புட்டு மாவினை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் நாட்டு சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து ஒரு சேர கலந்து விடவும்.

சுவையான சிறுதானிய புட்டு தயார்.

விருப்பமுள்ளவர்கள் நாட்டு சர்க்கரைக்கு பதிலாக மண்டை வெல்லத்தை கலந்து புட்டு தயார் செய்யலாம்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News