லைஃப்ஸ்டைல்

வயதானவர்களுக்கு சத்தான கீரை கொழுக்கட்டை

Published On 2018-08-23 04:57 GMT   |   Update On 2018-08-23 04:57 GMT
பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அரைக்கீரை வைத்து சத்தான கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

அரிசி - 250 கிராம்,
அரைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - 50 மில்லி,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

அரிசியுடன் துவரம்பருப்பு, மிளகு சேர்த்து ரவை போல உடைத்துக் கொள்ளவும்.

அரைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்துள்ள கீரையை வதக்கிக் கொள்ளவும்.

கனமான பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெயை விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

அடுத்து அதில் வதக்கிய கீரை சேர்க்கவும்.

அடுத்து ஒரு பங்கு அரிசி ரவைக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

தண்ணீர் நன்கு கொதித்த உடன் அரிசி ரவையைத் தூவி, உப்பு சேர்த்துக் கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, பத்திரத்தை மூடி வைத்து, வெந்த உடன் இறக்கவும்.

வெந்த கலவையை பிசைந்து, உருண்டைகளாக உருட்டி, ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

சூப்பரான சத்தான கீரை கொழுக்கட்டை ரெடி.

கார சட்னி, புதினா சட்னியுடன் சாப்பிட் அருமையாக இருக்கும். இதற்கு உங்களுக்கு விருப்பமான கீரையை பயன்படுத்தலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News