லைஃப்ஸ்டைல்

அதிகாலையில் எழுவது எப்படி?

Published On 2018-08-29 02:39 GMT   |   Update On 2018-08-29 02:39 GMT
குறிப்பிட்ட நேரத்தில் எழ வேண்டும் என்ற நிர்பந்தத்தோடு படுப்பவர்களுக்கு, அந்த நேரத்துக்கு முன்பாகவே ஹார்மோன்கள் சுரந்து உடலுக்கு ஒரு வித அழுத்தத்தைக் கொடுத்து எழுப்பி விடுகிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
நாம் அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும் என்று நாம் எடுத்த திடமான முடிவை நமது மூளையிடம் சொல்ல வேண்டும். ஏன் என்றால், நமது மூளையை விட உலகில் வேறொரு அலாரமே இல்லை என்பதுதான்.

நமது மூளையிடம் இதனைக் கூறிவிட்டால் அது உரிய நேரத்தில் ஹார்மோன்களை சுரந்து அலாரம் அடிக்கும் முன்பே நம்மை தூக்கத்தில் இருந்து எழுப்பி விடும்.

அதாவது, குறிப்பிட்ட நேரத்தில் எழ வேண்டும் என்ற நிர்பந்தத்தோடு படுப்பவர்களுக்கு, அந்த நேரத்துக்கு முன்பாகவே ஹார்மோன்கள் சுரந்து உடலுக்கு ஒரு வித அழுத்தத்தைக் கொடுத்து எழுப்பி விடுகிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே போல், எந்த நிர்பந்தமும் இல்லாமல் படுக்கைக்குப் போகும் நபர்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பதே இல்லையாம்.

உங்கள் படுக்கை அறை, சூரிய ஒளி ஊடுருவும் வகையில் அமைக்கப்பட்டால் விடிந்ததுமே நீங்கள் எழுந்திருக்க முடியும். அதாவது, காலையில் விடிந்ததும் சூரியன் உதயமாகும் போது, அதன் ஒளி அல்லது விடியும் போது அந்த வெளிச்சம் உங்கள் அறைக்குள் வந்தால், உங்களது உறக்கம் கலைந்து உங்களால் எளிதாக எழும்ப முடியும். அதற்கும் மனித உடலில் சுரக்கும் ஹார்மோன் தான் காரணம்.

தினமும் ஒரே நேரத்தில் எழுவதை வழக்கமாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்காக 10 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டி இருந்தால், 8 மணிக்குத்தான் எழுந்திருப்பேன் என்று தினமும் ஒரே நேரத்தில் எழுந்தால் அது வேலைக்கு ஆகாது. எனவே, தினமும் காலை 6 மணிக்கு எழும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொண்டால் உங்களுக்கு எந்த அலாரமும் தேவைப்படாது. உங்கள் உடல் இயக்கமே 6 மணிக்கு உங்களை எழுப்பிவிடும்.

அதே சமயம் வார இறுதி நாளில் கும்பகர்ணனோடு போட்டி போடுவதால் உடல் இயக்கம் பாதிக்கப்படும். இதனால் மீண்டும் நீங்கள் உங்கள் அலாரத்தை தூசி தட்டி பேட்டரி போட வேண்டி இருக்கும்.

அலாரம்தான் ஒரே வழி என்று சொல்பவர்களுக்கு ஒரு டிப்ஸ். பொதுவாகவே அலாரத்தின் ஒலி மிகவும் முக்கியம். உறங்கிக் கொண்டிருப்பவர்களை மெதுவாக தட்டி எழுப்பும் வகையில்தான் அலாரத்தின் ஒலி இருக்க வேண்டுமே தவிர, பட்டாசு வெடிப்பதை போல் இருக்கக் கூடாது. அலாரத்தின் ஒலியைக் கேட்டு மெதுவாக எழுந்து அதனை அணைக்கும் போது உறக்கம் கலைவதுதான் நல்ல வழி.

இரவில் காற்றோட்டமான இடத்தில் உறங்கினால் காலையில் விரைவாக எழுந்திருக்க முடியும். இல்லை என்றால், இரவு முழுவதும் சரியான உறக்கமின்றி, காலையில் கண்விழிக்க இயலாமல் அவதிப்படுவோம். எனவே, காலையில் வழக்கமாக எழுந்திருக்கும் நேரத்தை விட முன்கூட்டியே எழுந்து, அன்றாடப் பணிகளை அழகாக செய்துவிட்டு பள்ளி, கல்லூரி, வேலைகளுக்கு விரைவாக செல்ல வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் மேற்கண்ட ஏதேனும் ஒன்றை முயற்சித்துப் பாருங்கள்.

Tags:    

Similar News