லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை

Published On 2019-06-10 02:50 GMT   |   Update On 2019-06-10 02:50 GMT
பிறந்த குழந்தைகள் தாய்ப்பாலைத் தவிர வேறு எதுவும் உணவு இல்லை. இருந்தும் அந்தக் குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை மற்றும் சரும ஒவ்வாமை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
அமெரிக்காவின் சிகாகோவில் இருக்கும் பெயின்பெர்க் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜோன் குக் மில்ஸ் தலைமையிலான குழு ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டது. பிறந்த குழந்தைகள் தாய்ப்பாலைத் தவிர வேறு எதுவும் உணவு இல்லை. இருந்தும் அந்தக் குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை மற்றும் சரும ஒவ்வாமை ஏற்படுவதற்கான காரணத்தை அறிவதுதான் ஆராய்ச்சியின் நோக்கம்.

பொதுவாக ஒவ்வாமைக்கு மூன்று காரணங்கள் இருக்கலாம். ஒன்று, மரபு வழி ஜீன்கள். மற்றொன்று, உணவு. இறுதியாக, சுற்றுப்புறச்சூழல். பிறந்து சில நாள்களே ஆன ஓர் எலியைச் சோதனைக்கு எடுத்துக் கொள்கின்றனர். அதற்கு ஒவ்வாமைக்கான ஜீன்களைச் செலுத்துகின்றனர். அடுத்து, தூசுப் படலத்தை நுகரவைக்கின்றனர். பின்னர், நிலக்கடலைப் போன்ற ஒவ்வாமை உணவுகளைக் கொடுக்கின்றனர். ஆனால், இந்த விஷயங்கள் அந்த எலிக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடவில்லை.

அந்த நேரம் ஜோன் குக்குக்கு பழைய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. நம் சருமத்தின் மேற்பரப்பு லிபிட்ஸ்‘ எனும் ஒருவகை கொழுப்பினால் ஆனது. அதுவே நம் சருமத்தின் தடுப்பு அரணாகச் செயல்படுகிறது. சோப்புகளில் இருக்கும் ரசாயனங்கள் அந்த அரண்களை உடைக்கும் தன்மை வாய்ந்தவை என்பது அந்தக் கட்டுரை சொல்லும் செய்தி. ஜோனுக்குச் சட்டென ஒரு பொறி தட்டியது. அது, அவரை அதிர்ச்சியடைய வைப்பதாகவும் இருந்தது.

தன் சோதனையை மீண்டும் முதலில் இருந்து தொடங்கினார். முதலில் எலியின் தோலின் மீது சோடியம் லாரைல் சல்பேட்’ எனும் வேதிப்பொருளைத் தடவினார் (இது பொதுவாக சோப்புகளில் காணப்படும் ரசாயனம்தான்). இரண்டு வாரக் காலத்தில் நான்கு முறை இப்படிச் செய்யப்பட்டது. பின்னர், சில ஒவ்வாமை உணவுகள் அதற்குக் கொடுக்கப்பட்டன. இப்படிச் செய்ததும், மிக விரைவாக எலியின் தோல் பல இடங்களில் தடிக்கத் தொடங்கியது. உடல் முழுக்க ஒவ்வாமை ஏற்பட்டது. இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் மிக முக்கியமான எச்சரிக்கையை முன்வைக்கிறார் ஜோன்.

“குழந்தைகளுக்கு உபயோகிக்கப்படும் ‘வெட் வைப்ஸ்’ ஒவ்வாமைக்கான மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. இனி வெட் வைப்கள் உபயோகிப்பதைக் குறைத்துக் கொண்டு, முன்னர் செய்தது போலத் தண்ணீரை உபயோகித்துக் குழந்தைகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.“ மேலைநாடுகளில் வெட் வைப்ஸ்’ அதிகமாக உபயோகிக்கும் பழக்கம் என்பது பல ஆண்டுகளாகவே இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளிலும், சமீபகாலமாக இது அதிகரித்து வருகிறது. இப்படி ஒருபக்கம் ஒவ்வாமை, ஒவ்வொரு நாட்டிலும் அதிகமாகிக்கொண்டே இருக்க, மறுபக்கம்‘வெட் வைப்ஸ்’களின் உபயோகமும் பரவலாகிக்கொண்டே இருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்கான எதிர்ப்புகளும் ஒருபக்கம் இருக்கவே செய்கின்றன.

எனினும், ‘வெட் வைப்’, சோப்புகள் உபயோகத்தைக் கூடுமானவரைக் குறைத்துக்கொண்டு, தண்ணீரால் குழந்தைகளின் உடலைச் சுத்தப்படுத்துவதே அவர்களின் உடலைப் பாதுகாக்கும். அதுவே ஆரோக்கியமும்கூட!
Tags:    

Similar News