லைஃப்ஸ்டைல்

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை

Published On 2019-03-14 03:17 GMT   |   Update On 2019-03-14 03:17 GMT
பொதுவாக தேர்வு பற்றிய பயத்தை மாணவ, மாணவிகள் தவிர்க்க வேண்டும். அவர்கள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆசிரியர்கள் ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.
பள்ளி மாணவர்கள் சந்திக்கும் முதல் பொதுத்தேர்வு என்றால் அது எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தான். பள்ளி பருவத்தில் இதுவரை நடந்த இறுதி தேர்வுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தேர்வாக அமைவதுடன், மாணவர்களின் எதிர்கால கல்வி பயணத்தை தீர்மானிக்கும் ஒரு திசைகாட்டியாக இந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அமையும் என்பதில் ஐயமில்லை.

இன்று தொடங்குகிறது


அந்த வகையில் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வை 45 ஆயிரத்து 576 பேர் எழுதுகிறார்கள். அவர்கள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆசிரியர்கள் ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

பொதுவாக தேர்வு பற்றிய பயத்தை மாணவ, மாணவிகள் தவிர்க்க வேண்டும். அச்சப்பட தேவையில்லை. தேர்வை தைரியமாக எதிர்கொண்டாலே, 80 மதிப்பெண்களுக்கு மேல் பெற முடியும். நல்ல முறையில் படித்து தேர்வு எழுதினால் 100 மதிப்பெண் பெறலாம். நிறைய எழுதினால் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்ற எண்ணம் சில மாணவர்களிடையே உள்ளது. தேவையான பதில் இருந்தாலே போதிய மதிப்பெண் கிடைத்து விடும். பொதுவாக பாடங்களை திட்டமிட்டு படிப்பது போல், தேர்வு எழுதும் நேரத்தை திட்டமிட்டு எழுத வேண்டும்.

நேரத்தை வீணாக்க கூடாது

மொழிப்பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற, எழுத்து பிழைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சந்திப் பிழை, ஒற்றுப்பிழை, மதிப்பெண்ணை குறைக்கும். ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு சரியாக பதில் அளிக்க வேண்டும். கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். அடித்தல், திருத்தல் இருக்க கூடாது. எழுதிய விடையை வேறு பக்கத்தில் மீண்டும் எழுதினால் மதிப்பெண் கிடைக்காது. முக்கிய பதில்களில் முன்னுரை, உள் தலைப்பு, முடிவுரை அவசியம் ஆகும். தேர்வு எழுதும் நேரத்தை திட்டமிடுவது முக்கியம்.

சுருக்கமாக விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் மேற்கொள் இட வேண்டும். மனப்பாட பகுதிகளில் சுலபமாக மதிப்பெண் கிடைக்கும். விரைவாகவும், தெளிவாகவும் எழுத மாணவர்கள் தொடர் பயிற்சி எடுத்திருக்க வேண்டியது அவசியம். மேலும் ஒன்றரை பக்க பதிலுக்கு நான்கு பக்கம் பதில் எழுதி நேரத்தை வீணாக்க கூடாது.

விடைத்தாள்

தேர்வில் கேள்விகளுக்கான பதில்களை எழுதி விட்டு பக்க எண்களை சரிபார்த்த பின்னரே, விடைத்தாளை கட்ட வேண்டும். இதில் அவசரப்பட கூடாது. உங்கள் வாழ்க்கை பயணத்தில் முதல் பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவ கண்மணிகள், முதல் மாணவராக உயர்ந்தால் வாழ்விலும் முதலாவதாக வரலாம் என்ற எண்ணத்துடன் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்கள்.
Tags:    

Similar News