ஆன்மிகம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் 24-ந்தேதி வைகாசி திருவிழா

Published On 2019-05-20 08:11 GMT   |   Update On 2019-05-20 08:11 GMT
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு வைகாசி திருவிழா வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், அய்யாவுக்கு பணிவிடையும், காலை 6.30 மணிக்கு திருக்கொடியேற்றமும் நடக்கிறது. பால பிரஜாபதி அடிகளார் கொடியேற்றி வைக்கிறார். அன்று இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் வீதி உலா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தினமும் சிறப்பு பூஜைகளும், இரவு அய்யா வெவ்வேறு வாகனங்களில் பவனியும் நடைபெறுகிறது.

வருகிற 31-ந் தேதி வெள்ளிக்கிழமை எட்டாம் நாள் திருவிழா நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு 11 மணிக்கு பதியின் வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் விழாவில் இரவு அனுமன் வாகன பவனியும் பத்தாம் நாள் விழாவில் இரவு இந்திர வாகன பவனியும் நடக்கிறது.

அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி பதினொன்றாம் நாள் திருவிழாவன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. விழா நாட்களில் கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
Tags:    

Similar News