ஆன்மிகம்

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா தொடங்கியது

Published On 2019-05-13 05:55 GMT   |   Update On 2019-05-13 05:55 GMT
பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் அவதரித்த வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாளே வைகாசி விசாக திருவிழாவாக அனைத்து முருகன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. ‘வசந்த உற்சவம்’ என்று வர்ணிக்கப்படும் இந்த திருவிழா பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறுகிறது.

திருவிழாவையொட்டி நேற்று முன் தினம் இரவு வாஸ்து சாந்திபூஜை, புனிதமண் எடுத்தல், அஸ்திரதேவர் வலம் வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகளும், 16 வகை அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் சப்பரத்தில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி உட்பிரகாரம் வலம்வந்து, கொடிக்கட்டு மண்டபத்தில் அருள் பாலித்தார்.

பின்னர் மண்டபத்தில் வைத்து விநாயகர் பூஜை, கொடிமரம், கொடிபடத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து, காலை 9.40 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் எழுப்பினர். பின்னர் கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

10 நாட்கள் கொண்டாடப்படும் திருவிழாவில் தினசரி காலை தந்த பல்லக்கிலும், இரவில் தங்க மயில், வெள்ளியாலான காமதேனு, யானை, தங்ககுதிரை போன்ற வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருவுலா காட்சி நடைபெறுகிறது. 6-ம் திருநாளில் மாலை 6.30 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 7-ம் திருநாளில் தேரோட்டம் நடைபெறுகிறது.

விழாவையொட்டி 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் தினசரி மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மங்கல இசை, பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News