ஆன்மிகம்

பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2019-05-11 07:38 GMT   |   Update On 2019-05-11 07:38 GMT
பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை (ஞாயிற்றுக் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
கலியுக கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று வைகாசி விசாக திருவிழா. உலக உயிர்களின் இன்னல்களை அழிக்க வைகாசி மாதத்தில் பவுர்ணமியையொட்டி வரக்கூடிய விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்த நாளே வைகாசி விசாக திருநாளாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

அதன்படி பழனி முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலையில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜை நடக்கிறது. அதையடுத்து காலை 9 மணிக்கு மேல் கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதேபோல் மலைக்கோவிலில் உச்சிக்கால பூஜையில் காப்புக்கட்டும் நடக்கிறது.

10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினசரி காலையில் தந்தப்பல்லக்கில், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருவுலாவும், இரவில் வெள்ளியால் ஆன காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி மயில் மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை, புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. திருவிழாவின் 6-ம் நாளான வருகிற 17-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அதையடுத்து வெள்ளிரதத்தில் சுவாமி திருவுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

7-ம் நாளான வைகாசி விசாக தினத்தன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதையடுத்து காலை 10.45 மணிக்கு திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது. பின்னர் இரவில் பெரிய தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

10-ம் நாளன்று திருவிழா நிறைவு பெற்று கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு சமய சொற்பொழிவு, இன்னிசை, நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News