ஆன்மிகம்

சிங்கிரிகுடி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2019-05-10 07:33 GMT   |   Update On 2019-05-10 07:33 GMT
சிங்கிரிகுடி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடைபெறுகிறது.
கடலூர் அடுத்த சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடை பெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் உற்சவர்களான ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மேளதாளத்துடன் உற்சவர்கள், கொடிமரத்தின் அருகே கொண்டு வரப்பட்டனர்.

பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மேளதாளத்துடன் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி கோஷமிட்டனர். தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள், கோவில் வளாகத்தை சுற்றிவந்தார். மாலையில் ஹம்ச வாகனத்தில் உற்சவர் வீதி உலா நடந்தது. பிரம்மோற்சவத்தையொட்டி தினமும் நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. ஒவ்வொரு நாள் இரவும் வெவ்வேறு வாகனத்தில் உற்சவர்கள் வீதி உலா நடைபெற இருக்கிறது. வருகிற 17-ந் தேதி நரசிம்மர் ஜெயந்தி மற்றும் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News