ஆன்மிகம்
அள்ளூர் மகாசக்தி மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றபோது எடுத்த படம்.

மகாசக்தி மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா

Published On 2019-04-25 06:09 GMT   |   Update On 2019-04-25 06:09 GMT
சேத்தியாத்தோப்பு அருகே மகாசக்தி மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அள்ளூர் கிராமத்தில் மகாசக்தி மாரியம்மன் மற்றும் செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அன்று இரவு சாமி வீதிஉலா நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு தினசரி சிறப்பு பூஜைகளும், 20-ந்தேதி செடல், பால்குடம் மற்றும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சாமிகளுக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் மகாசக்தி மாரியம்மன் மற்றும் செல்லியம்மன் அக்னி குண்டம் முன்பு எழுந்தருளினர்.

பின்னர் விரதமிருந்த திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News