ஆன்மிகம்
விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

விராலிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்

Published On 2018-11-14 03:39 GMT   |   Update On 2018-11-14 03:39 GMT
கந்தசஷ்டி விழாவையொட்டி விராலிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முருகன் வழிபாட்டு தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவது விராலிமலை முருகன் கோவில். இங்குள்ள மலைமேல் முருக பெருமான் வள்ளி - தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இக்கோவில் முருக பெருமான் அருணகிரிநாதருக்கு காட்சியளித்து, அஷ்டமாசித்திகளை வழங்கி, திருப்புகழ் பாட சொல்லி அதன்படி, அருணகிரிநாதர் முருகனை பற்றி பாடியதும், நாரதருக்கு பாவ விமோசனம் தந்த கோவிலாகவும் விளங்குகிறது.

இத்தனை சிறப்புமிக்க இக்கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவானது கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மலைமேல் உள்ள முருக பெருமான் மற்றும் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் நாகம், சிம்மம், பூதம், மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி முருக பெருமான் கோவில் கீழ ரதவீதியில் நேற்று மாலை 6 மணியளவில் எழுந்தருளினார்.

அங்கு சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்தார். பின்னர் சிங்கமுகமகாவும், தன முகமாகவும் அடுத்தடுத்து உருமாறும் சூரனை முருக பெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறும் சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி தன்னுடன் ஆட் கொண்டார். சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் மாற்றி சுவாமி ஆட் கொண்டார். அப்போது பக்தர்கள் முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் முருக பெருமானுக்கு ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து முருகனுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் முருகன் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பால், லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை முருக பெருமான், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கண்ணன் தலைமையில், கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து மற்றும் மண்டகபடிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News