ஆன்மிகம்
தாரகாசூரனை பராசக்திவேல், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்களால் சம்ஹாரம் செய்வதையும் படத்தில் காணலாம்.

பழனி முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Published On 2018-11-14 03:20 GMT   |   Update On 2018-11-14 03:20 GMT
பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவையொட்டி பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க சூரசம்ஹாரம் நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமான் அசுரர்களுடன் போர் புரிந்து அவர்களை அழித்து தேவர்களை காத்தருளினார். இந்த நிகழ்வே முருகப்பெருமான் எழுந்தருளிய கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா முருகனின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

விழாவின் 6-ம் திருநாளான நேற்று கந்தசஷ்டி விழாவாகும். இதையொட்டி மாலை 6 மணிக்கு மேல் அடிவாரம் கிரிவீதியில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விளாபூஜை, சிறுகாலசந்தி, காலசந்தி பூஜைகள் நடந்தன.

பின்னர் பகல் 11.30 மணிக்கு சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி மண்டகப்படி அடையும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சின்னக்குமாரருக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் வில்-அம்பு, கேடயம், கோடரி உள்ளிட்ட ஆயுதங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதையடுத்து உச்சிகால பூஜைக்கு பிறகு மலைக்கோவிலில் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சண்முகார்ச்சனை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து 2.45 மணியளவில் அசுரர்களை வதம் செய்வதற்காக மலைக்கோவில் மூலவரான தண்டாயுதபாணி சுவாமியிடம் பராசக்திவேல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், சக்தி வேலை மலைக்கொழுந்து அம்மனிடம் வைத்து சிறப்பு பூஜை, தீபாராதனை செய்து பின்னர் அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியை நடத்தினார். அதன்பின்னர் மலைக்கோவில் நடை அடைக்கப்பட்டது. தொடர்ந்து சின்னக்குமாரர் வில்-அம்பு, கேடயத்துடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி மலைக்கோவிலில் இருந்து சூரனை வதம் செய்வதற்காக புறப்பட்டார். அவருடன் வீரபாகு தேவர், நவ வீரர்கள் புடைசூழ புறப்பட்டனர்.

விழாவையொட்டி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் விசேஷ அலங்காரத்தில் வெள்ளி பிடாரி மயில் வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மலைக்கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் பராசக்தி வேலுடன் புறப்பட்ட சின்னக்குமாரர், பாதவிநாயகர் கோவில் வந்தடைந்தார்.

சூரசம்ஹாரத்தை காண திரண்ட பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

அதையடுத்து பராசக்தி வேல் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பராசக்தி வேலுக்கு மாலைகள் அணிவித்தும், மலர் தூவியும் வழிபட்டனர். பின்னர் கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் மற்றும் சர்வசாதகம் செல்வசுப்பிரமணிய குருக்கள், சுந்தரமூர்த்தி சிவம் மற்றும் ஓதுவார்கள் பராசக்தி வேல், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்களை சின்னக்குமாரரிடம் வைத்து வழிபாடு நடத்தி, தீபாராதனைகள் செய்து அனுமதி பெற்று போருக்கு புறப்பட்டனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சிகள் தொடங்கின. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகசூரன் ஆகியோரும் நான்கு ரதவீதிகளில் போர் முரசு கொட்டியபடி புறப்பட்டு பழனி அடிவாரம் கிரி வீதியை வந்தடைந்தனர்.

இதைத்தொடர்ந்து சின்னக்குமாரரிடம் பராசக்தி வேலை பெற்ற கோவில் குருக்கள்கள் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரனை வதம் செய்து சூரசம்ஹார நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு ‘அரோகரா’, வீரவேல் முருகனுக்கு ‘அரோகரா’ என்று சரண கோஷம் எழுப்பினர். நிகழ்ச்சியில் வாணவேடிக்கையும் நடந்தது.

அதைத்தொடர்ந்து கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகசூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெற்றது. அதன் பின்னர் இந்திர வாகனத்தில் முத்துக்குமாரசுவாமியுடன், சின்னக்குமாரர் சந்திக்கும் நிகழ்ச்சியும், தீபாராதனையும், வெற்றி விழாவும் நடைபெற்றது. பராசக்திவேலுடன் சின்னக்குமாரர் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோஷண பூஜைக்கு பின்பு கோவில் நடை திறக்கப்பட்டு ராக்கால பூஜை நடைபெற்றது.

விழாவில் இன்று (புதன் கிழமை) மலைக்கோவிலில் காலை 9 மணிக்கு சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், தொடர்ந்து திருமண விருந்தும் நடைபெறுகிறது. பின்னர் மாலை 7 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவில் முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடும் நடைபெறுகிறது. 
Tags:    

Similar News