காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளது. விழாவையொட்டி கோவில் அருகில் குடில் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை திருவிழா வருகிற 11-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக கடந்த 2-ந்தேதி கால் நாட்டுதலுடன் விழா தொடங்கி, தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே கோவில் அருகே குடில் அமைத்து, சமையல் செய்து தங்கியிருந்து வழிபடுவது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டும் கோவில் அருகே தங்குவதற்கு குடில் அமைக்கும் பணியில் பக்தர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். வனப்பகுதியில் வனத்துறைக்கு இடையூறு இல்லாத வகையில், சமையல் செய்து சாப்பிடுவதற்கு கியாஸ் சிலிண்டருடன் வந்து தங்குகின்றனர். பக்தர்கள் தங்கும் இடத்தில் தற்காலிக சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. காணிகுடியிருப்பு பகுதியில் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதற்காக சாலையோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.