ஆன்மிகம்

உலகப் புகழ் வாய்ந்த கோமதீஸ்வரர் கோவில்

Published On 2019-02-10 01:29 GMT   |   Update On 2019-02-10 01:29 GMT
சிரவணபெலகொலா என்னு மிடத்தில் அமைந்துள்ளது கோமதீஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சிரவணபெலகொலா என்னு மிடத்தில் அமைந்துள்ளது கோமதீஸ்வரர் கோவில். இந்த இடம் மைசூரிலிருந்து 93 கிலோமீட்டர் தொலைவிலும்; பெங்களூரிலிருந்து 153 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கு காணப்படும் கோமதீஸ்வரர் திருவுருவம் உலகப் புகழ் வாய்ந்தது. ஒற்றைக் கல்லாலான இதன் உயரம் 50 அடி. சிலையின் பாதத்தை அருகில் சென்று காணவேண்டுமென்றால், 500 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும்.

தரை மட்டத்திலிருந்து 3,000 அடி உயரத்தில் இந்தச் சிலை இருக்கிறது. இந்தச் சிலை இருக்கும் குன்றுக்கு சந்திரகிரி என்று பெயர். அதற்கு எதிரிலேயே விந்தியகிரி குன்று உள்ளது. இது சந்திரகிரி குன்றைவிட உயரம் குறைந்தது.

கோமதீஸ்வரர் சமணர்கள் வணங்கும் தெய்வம். இரண்டு குன்றுகளிலும் பல சமண முனிவர்கள் அடக்கம் செய்யப்பட்ட சமாதிகளும் வேறு பல நினைவுச் சின்னங்களும் காணப்படுகின்றன. சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த இரண்டு இடங்களையும் மிகவும் புனிதமான இடங்களாகக் கருதி வழிபட்டு வருகின்றனர்.

கோமதீஸ்வரர் சிலை ஆயிரம் வருடங்களுக்குமேல் பழமையானது. சமுத்திராயா என்னும் வம்சத்தினர் இப்பகுதியை ஆண்ட காலகட்டத்தில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டது. சிலையின் உருவாக்கத்தில் சமண முனிவரான அரிஷ்டநேமி என்பவர் பெரும் பங்கு வகித்தார். அவரது மேற்பார்வையில்தான் இந்தச் சிலை உருவாக் கப்பட்டது.

கோமதீஸ்வரர் சிலை நிர்வாணக் கோலத்தில் அமைந்துள்ளது. அதாவது முற்றும் துறந்த நிலையின் வெளிப்பாடு. (சமண முனிவர்கள் நிர்வாண கோலத்திலேயே பக்தர்களுக்குத் தரிசனம் தருவார்கள்.) அந்தத் திருவுருவத்தைக் காணும்போது அலாதியான மன அமைதி நம்மிடம் உண்டாகிறது. சிலையின் அழகு நம்மைக் கவருகிறது. பிரம்மாண்டம் நம்மை வியக்க வைக்கிறது. கண்களில் காணப்படும் கருணை நம்மை ஈர்க்கிறது.

சிலையின் திருமுடியின்மேல் ஆயிரக்கணக்கான எறும்புகள் கூடுகட்டி ஊர்ந்துகொண்டிருப்பதுபோலத் தோன்றுகிறது. உடலின் பல பாகங்களில் வல்லிக்கொடி படர்ந்திருப்பது போல் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவரது இன்னொரு பெயர் பகுபலி சுவாமி. இவர் சமண மதத்தைச் சேர்ந்த தீர்த்தங்கரர்களில் ஒருவர்.

தங்கரர்களில் பலரும் ராஜவம்சத்தில் பிறந்து, ஒரு காலகட்டத்தில் எல்லாவற்றையும் துறந்து கடுந்தவம் இயற்றி முனிவராக ஆனவர்கள். அதைப்போல கோமதீஸ்வரரும் ஒரு தீர்த்தங்கரரே. அவர் கடுந்தவம் செய்த போது அவரைச் சுற்றி எறும்புப் புற்று தோன்றி தலைப்பாகம் வரை மறைத்திருந்ததாகவும், உடலில் கொடிகள் படர்ந்து சுற்றிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த கோலத்தில் வடிவமைக்கப்பட்ட சிலையே இது.

கோமதீஸ்வரருக்கு நடக்கும் விழாக்களில் மிகவும் முக்கியமானது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும், "மகாமஸ்தக அபிஷேகம்'. அந்த சமயத்தில், அவ்வளவு உயரமான சிலையின் திருமுடிக்கு அருகில் பக்தர்கள் நின்று அபிஷேகம் செய்ய மிகவும் பாதுகாப்பான முறையில் சாரம் கட்டி வசதி செய்து தருகின்றனர். அன்றைய தினத்தில் சிலைக்கு விசேஷ அபிஷேகங்கள் சமண முனிவர்களாலும், பக்தர்களாலும், முக்கிய பிரமுகர்களாலும் செய்யப்படுகின்றன.

ஒரு முக்கிய சமண முனிவர் தலைமைப் பொறுப்பேற்று, வழிகாட்டி அர்ச்சகர்களையும் மற்றவர்களையும் அபிஷேகம் செய்யச் சொல்கிறார்.



முதலில் 1,008 குடங்களில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. பிறகு பால், தயிர், நெய், சர்க்கரை, பாதாம் பருப்பு போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அதன்பிறகு வெள்ளி, தங்கத்தினால் செய்யப்பட்ட மலர்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

ஆயிரக்கணக்கான சமண முனிவர்களும் லட்சக்கணக்கான பொதுமக்களும் இந்த வழிபாட்டில் கலந்துகொள்ள- வழிபாட்டைத் தரிசிக்க வருகின்றனர்.

மிகவும் புனிதமான நாள் இது. நேரில் சென்று அபிஷேகத்தைப் பார்ப்பவர்களுக்கு உடல் சிலிர்க்கும். இந்த அபிஷேகம் உலக நன்மைக்காகவும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் செய்யப்படும் அபிஷேகம் ஆகும்.

எல்லாரும் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடன், ஐஸ்வரியத்துடன் வாழவும், மன அமைதி பெறவும், நாட்டில் அமைதி நிலவவும், மனித உயிர்களையும், பிராணிகளையும், மரம், செடி, கொடிகளை நேசிக்கவும் செய்யப்படும் அபிஷேகம்.

பக்தர்களது எல்லா கோரிக்கைகளுக்கும் சமணர்களால் கடவுளாகக் கருதப்படும் சமண முனிவரான கோமதீஸ்வரர் (பகுபலி சுவாமி) அருள்புரிகிறார்.

அபிஷேகம் முடிந்ததும் கோமதீஸ்வரரை வணங்கும் உரிமை மைசூர் மகாராஜாவுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த வம்சத்த வர்களுக்கு ராஜ்ஜியம் இல்லாவிட்டாலும் இன்றும் அந்த வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மகாமஸ்தக அபிஷேகம் இறுதியாக 2006-ஆம் ஆண்டில் நடந்தது. அடுத்து 2018-ஆம் ஆண்டில் நடைபெறும்.

இந்தச் சிலையைப் பழுதுபடாமல் பாதுகாக்க கர்நாடக அரசாங்கம் ஒரு அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட இந்தச் சிலை இன்றும் பழுதுபடாமல் அப்படியே உள்ளது!

மத்திய அரசாங்கம் இந்தச் சிலையையும், சுற்றியுள்ள இடங்களையும் தொல்பொருள் பாதுகாப்பு அமைப்பின் பொறுப்பில் கொடுத்துள்ளது.

கர்நாடக அரசாங்கம், சிரவணபெலகொலா, பேளூர், ஹளபேடு ஆகிய இடங்களை ஒரே நாளில் சென்று பார்த்துவர, பல விசேஷ பேருந்துகளை மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் இயக்குகிறார்கள்.

சிரவணபெலகொலா.---வெள்ளை குளத்து முனிவர் (பெல கொளத்து சிராவணர்!) என்று பொருளாம்.சந்திரகுப்த மௌரியர் பரந்த பேரரசை துறந்து தனது சமண சமய குருவுடன்(பகவான் பத்ரபாகு) இதில் தெரியும் மலையில்தான் தனது இறுதி காலத்தைக் கழித்தார். அதனால் இந்த குன்று சந்திரகிரி என்று அழைக்கப் படுகிறது.தென்னிந்தியாவில் சமணத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்ட இடம்.

மலையுச்சியில் நிற்கும்போது தென்றல் உடலை வருட, 2500 ஆண்டுகால வரலாறு மனதில் உருண்டது. உணர்வலைகள் அதிர்ந்தன. சலனம் குறைந்து மௌனம் நிறைந்தது. வாழ்வில் பார்க்க வேண்டிய இடங்களுள் ஒன்று.

ஆன்மிக நாட்டமுள்ளவர்கள் அவசியம் காணவேண்டிய தலம் இது!
Tags:    

Similar News