ஆன்மிகம்

வாழ்வில் உயர்வு தரும் விரதங்கள்

Published On 2019-05-11 08:21 GMT   |   Update On 2019-05-11 08:21 GMT
விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது நம்பிக்கையாகும். இந்த விரதங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது நம்பிக்கையாகும். எனவே மற்ற தமிழ் மாதங்களுடன் ஒப்பிடுகையில் புரட்டாசி மாதத்தில்தான் நிறைய பேர் விரதம் மேற்கொள்வதுண்டு.

சித்தி விநாயக விரதம் :

புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதம் இது. பிருகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது. இந்நாளில் உடல்-உள்ள சுத்தியோடு விரதம் இருந்து, பிள்ளையாரை வழிபட, காரிய சித்தி உண்டாகும்.

சஷ்டி – லலிதா விரதம் :

புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வமங்கலங்களையும் அருளும்.

அமுக்தாபரண விரதம் :

புரட்டாசி வளர்பிறை சப்தமியில, உமா – மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதம் சந்ததி செழிக்க, அருள் செய்யும். பிள்ளை – பேரன் எனப் பரம்பரை தழைக்கும். சவுபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

ஜேஷ்டா விரதம் :

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதம் இது. ‘எங்களை நீ பிடிக்காதே’ என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.

தூர்வாஷ்டமி விரதம் :

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம்புற்களைக் கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.

மகாலட்சுமி விரதம் :

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம்பெறும்.

கபிலா சஷ்டி விரதம் :

புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. சித்திகளைத் தரும்.

Tags:    

Similar News