ஆன்மிகம்

பார்வதியால் உருவான சிவராத்திரி விரதம்

Published On 2019-02-28 03:56 GMT   |   Update On 2019-02-28 03:56 GMT
சிவராத்திரி தினத்தில் வழிபடுபவர்களுக்கு இம்மையில் செல்வமும், மறுமையில் சொர்க்கமும், இறுதியில் முக்தியும் அளிக்க வேண்டும் என்று பார்வதி தேவி பரமனிடம் வேண்டினாள். அதுவே மகா சிவராத்திரி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
சிவராத்திரி வழிபாட்டை உருவாக்கிய பெருமை பார்வதி தேவியையே சேரும். ஒரு முறை பார்வதிதேவி, விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களை மூடினார். உலகுக்கு ஒளி வழங்கும் சூரியனும், சந்திரனுமே, ஈசனின் இரண்டு கண்களாக உள்ளனர். எனவே ஈசனின் கண்கள் மூடப்பட்டதும், உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. உலக உயிர்கள் தவித்தன.

இதனால் பயந்து போன பார்வதிதேவி, தன்னுடைய பிழையை பொறுத்தருளும்படி சிவனை வேண்டினாள். அதோடு உலகம் மீண்டும் இயங்கவும், உயிர்கள் துன்பமின்றி வாழவும் அன்றைய இரவில் நான்கு ஜாமங்களிலும் கண் விழித்து சிவனை அர்ச்சனை செய்து வழிபட்டாள். வழிபாட்டின் முடிவில் பார்வதிக்கு காட்சியளித்த ஈசன், தன் உடலில் பாதியை அவளுக்குத் தந்து உலகமும், உயிர்களும் இன்புற்று வாழ அருள்பாலித்தார்.

தனக்கும் உலக உயிர்களுக்கும் அருள்பாலித்த ஈஸ்வரனை வணங்கிய பார்வதி, “உலகமும் உயிர்களும் மீண்டும் இயங்க காரணமான இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் மறவாமல் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அது உங்கள் திருநாமத்தினாலேயே விளங்க வேண்டும். அந்த தினத்தில் வழிபடுபவர்களுக்கு இம்மையில் செல்வமும், மறுமையில் சொர்க்கமும், இறுதியில் முக்தியும் அளிக்க வேண்டும்” என்று பரமனிடம் வேண்டினாள். அதுவே மகா சிவராத்திரி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
Tags:    

Similar News