ஆன்மிகம்

வியக்கும் வாழ்வை அருளும் விரதங்கள்

Published On 2019-01-30 08:17 GMT   |   Update On 2019-01-30 08:17 GMT
‘விரதம்’ என்றால் ‘நோன்பு’ என்று பொருள். உடலை வருத்திக்கொண்டு உள்ளத்தை இறைவன் பால் செலுத்தி நம் கோரிக்கைகளை சொல்வதன் மூலம் நற்பலன்கள் கிடைப்பதை புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
‘விரதம்’ என்றால் ‘நோன்பு’ என்று பொருள். உடலை வருத்திக்கொண்டு உள்ளத்தை இறைவன் பால் செலுத்தி நம் கோரிக்கைகளை சொல்வதன் மூலம் நற்பலன்கள் கிடைப்பதை புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

உண்ணாவிரதம் இருந்தும் நம் கோரிக்கைகளை இறைவனிடம் எடுத்துரைப்பதற்கு பெயர் ‘உபவாசம்’ என்பதாகும். நம் ஜாதகத்தின்படி எந்த தெய்வத்தின் அருளைப் பெற விரும்புகிறோமோ, அந்த தெய்வத்திற்கு உகந்த திருநாளில், விரதம் இருந்து பால், பழம் மட்டும் சாப்பிட்டு மற்ற ஆகாரங்கள் எதுவும் உண்ணாமல் கோயிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் இருந்தோ பிரார்த்தனை செய்தால், நம் வாழ்வில் ஏற்பட்ட இடையூறுகள் அகலுகின்றன என்பதை நம் முன்னோர் கண்டறிந்துள்ளனர்.

விநாயக பெருமானுக்கு சதுர்த்தியில் விரதமும், கந்தப் பெருமானுக்கு சஷ்டியில் விரதமும், சிவபெருமானுக்கு சிவராத்திரியில் விரதமும், அம்பிகைக்கு நவராத்திரியில் விரதமும், பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி விரதமும், நமது பாவபுண்ணியத்தை பதிந்து வைக்கும் சித்திரகுப்தனுக்கு சித்ரா பவுர்ணமி விரதமும், அனுமனுக்கு அனுமன் ஜெயந்தி விரதமும் நாம் மேற்கொள்வதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறோம்.

அனுதினமும் கடவுளை வணங்குவதற்கு உகந்த நாளாக இருந்தாலும், நம் கோரிக்கைகளை சொல்வதற்கு  உகந்த நாட்களாக சில நாட்களை தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார்கள். தெய்வங்களிடமும் குறிப்பிட்ட நாட்களில் நம் கோரிக்கைகளை சொன்னால், உடனடியாக அது நிறைவேறுகிறது என்பதை அனுபவத்தில் காணலாம்.

அங்ஙனம், கோரிக்கை சொல்லும் நாளில், வீட்டை மெழுகி கோலமிட்டு, பூஜையறையில் பஞ்சமுக விளக்கேற்றி, நைவேத்ய பொருள் வைத்து பகல் முழுவதும் விரதமாக இருந்து காலையிலும், மாலையிலும், பக்தி பாடல்களை பாடி அதன் பிறகு நமது கோரிக்கைகளை இறைவனிடம் எடுத்துரைத்தால், இல்லத்தில் இனிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். திருமணம் ஆகாத பெண்கள், மழலை கிடைக்காத தம்பதியர், வேலை கிடைக்காத ஆண்கள், விரும்பிய தொழில் அமைய நினைப்பவர்கள், போதிய பொருளாதாரம் வேண்டுபவர், பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்க நினைப்பவர்கள், அத்தனை பேருக்கும் வியக்கும் விதத்தில் வாழ்வை அமைத்து தருவதில் முதன்மையானது விரதங்கள்தான்.

கிரகங்கள் பலம் இழந்திருந்தால், அந்த கிரகத்திற்குரிய நாளில் வாரம் ஒரு நாள் விரதமிருக்கலாம். இதில் வெள்ளிக்கிழமை விரதம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதே நேரத்தில் சுக்கிரன் ஜாதகத்தில் பகை கிரகமாக இருந்தால், வெள்ளிக்கிழமை துதிப்பாடல்களை பாடி அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளலாம். அந்த ஜாதக

அமைப்பு உள்ளவர்கள் விரதத்தை வேறொரு நாளில் மாற்றிக் கொள்வதே நல்லது. குருவருள் பெற வியாழக்கிழமை பலரும் விரதமிருப்பதை பார்த்திருப்பீர்கள். ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதால் அன்று விரதமிருப்பவர்கள் ஆலயத்திற்கு சென்று குருவை நேரடியாக தரிசித்து வந்தால், சீரும்  சிறப்பும் வந்து சேரும்.

கந்த சஷ்டியில் ஆறு நாட்களும் விரதமிருப்பவர்கள், அறுபடை வீடு கொண்டு அழகனின் அருளுக்கு பாத்திரமாகலாம். சஷ்டியில் விரதமிருந்தால், போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும். தேய்பிறை அஷ்டமியில் விரதமிருந்து சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், பணமழையில் நனையும் வாய்ப்பு கிட்டும்.

பிரதோஷத்தன்று விரதமிருந்து நந்தீஸ்வரரை வழிபட்டால், பெருமைமிக்க வாழ்வையும், ராம நவமியில் ராமரை நினைத்து வழிபட்டால் இல்வாழ்க்கை சிறப்பாகவும் அமையும். பொதுவாக, எல்லா மாதங்களிலும் ஏதாவது ஒரு நட்சத்திரம் அல்லது திதி சிறப்பானதாக கருதப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக மூலமுதற்கடவுளாக விளங்கும் விநாயகப் பெருமானை விரதமிருந்து வழிபட்டு வந்தால், வெற்றி மீது வெற்றி உங்களுக்கு வந்து சேரும்.
    
ஆவணி மாதம் வருகிற வளர்பிறையில் சதுர்த்தி திதி வரும் போது ‘விநாயகர் சதுர்த்தி’ என்று சிறப்பாகக் கூறுவர். சதுரம் என்றால் நான்கு பக்கங்களிலும் பூர்த்தியானது. எனவே, வாழ்க்கையில் நமது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாக மாதந்தோறும் வரும் சதுர்த்தியில் கூட விநாயகப் பெருமானுக்கு விரதமிருந்து வழிபட்டு வந்தால், மங்கல வாழ்வு அமையும். விநாயகர் வழிபாடு எல்லோரும் செய்யக்கூடிய எளிய வழிபாடாகும். 
Tags:    

Similar News